மருளில்லா மலர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மருளில்லா மலர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், செப்டம்பர் 24, 2008

33.மரணம்…

மரணம்…

மரணம்
இது ஜீவராசிகளுக்கு
இறைவன் விரும்பிய
கரணம்…

மரணம் இல்லாத
வாழ்க்கையில்
சுவை இல்லை
வளம் இல்லை…

மரணம் அனைவருக்கும்
சமம்
அதை மறப்பதால்
மரணச்செய்தி
கேட்டதும் மனம் ஆவது
ரனம்…

மனிதர்களுக்கு
மன்னிப்பையும்
மறத்தலையும்
அருளுவது
மரணம்…

மரணம் என்பது
அச்சமல்ல
அது ஒரு மாற்றம்
உரு மாற்றம்
எந்த பொருளுக்கும்
அழிவில்லை
எல்லாம் உருமாறுகிறது
எதில் துவங்கியதோ
அதில் நிறையும்
விரளம்…

மரணம் உடலுக்கு
அதை சுவைப்பது ஆன்மா
மண்ணோடு மண்ணாகிப்போவது
மகான்கள் அல்ல
மனிதர்கள்…

மரணிப்பவரெல்லாம்
மரணமாவதில்லை
சிலர்
வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள்
தத்துவங்களாய்…

உடலுக்கு ஆடை உடுத்தி
ஜாடைப்பார்த்து
நிஜங்களை மறைக்க
நிறங்கள் பூசி
பல வர்ணங்களில்
அழகு பார்த்த ஆக்கை…

மரணம் என்ற நிகழ்வில்
உயிர் களையும்போது
நான் என்பதை
உடலாய் பார்த்த உள்ளம் படும்
வேதனைகள்…

ஆன்மாவின் பிரிவு
நான் என்ற எண்ணத்தில்
அவதிகள்…

நாம் மரணமாகும் முன்
நம்மில் மரணமாவோம்…

32.தர்மம்…

தர்மம்…

தர்மம் தலைக்காக்கும்
தவமாய்சொன்ன வார்த்தை…

தலைக்காக்க வேண்டி
தர்மம் செய்தேன்
கலைகாக்கவும்
தர்மம் செய்தேன்
ஏழைபசி போக்கவும்
தர்மம் செய்தேன்
எனக்குள் நிறைவு
நான் தர்மஸ்தன் என்று…

தர்மம்சொன்னது
நீ அதர்மஸ்தன்
நீசெய்த தர்மம் உன்னிடமே
தர்மம்செய்த எண்ணத்தையும்
தர்மம்செய்யாத வரையில்…!

31.வணக்கம்…

வணக்கம்…


வணக்கம்
இது இறைவனுக்கு
சொந்தமானது...

தன்னை வணங்கும்படி
இறைவன்
மனிதனுக்கு சொல்கிறான்…

வணக்கம் என்ற
வார்தையினால்
இறைவனை
வணங்க முடியாது…

வணக்கம் என்பது
செயல்பாடு
மனமும் சிந்தனையும்
ஒர் நிலை
பெறவேண்டும்-இது
ஆன்மாவிற்கும்
ஆண்டவனுக்கும்
உள்ள தொடர்பு…

மனிதனுக்கு வணக்கம்
சொல்வது-அது
இறைவனை
வணங்குவது போலன்று…

வணக்கம் சொல்வது
கீழைத் தேயத்துப் பழக்கம்
அது
தமிழர் வழக்கம்…

மனிதனுக்கு மனிதன்
வணக்கம் என்ற
வார்தையினால்
வெளிபடுத்துவது
நேசம்
மனிதனை
நேசிக்க தெரியாதவன்
இறைவனை
நேசிக்க முடியாது…

இறையின்
உயர் வெளிப்பாடு
மனிதனாக இருக்கிறான்-
அதனாலே
இறை
தனது பிரதிநிதி
மனிதன் என்கிறான்…

மனிதன்
மரணத்தை சுவைப்பவன்
மரணமாகியும்
சில மனிதர்கள்
இன்றும் வாழ்கிறார்கள்
இவர்கள்
மனிதர்களை நேசித்தவர்கள்
நேசமே
வணக்கம்…

30.எனக்கு நானே கண்ணாடி

எனக்கு நானே கண்ணாடி…

ஞானமறிய
ஞானியைத்
தேடி நின்றேன்…

ஞானம் பயில்வது
ஞானியவதற்கல்ல
மனிதனாக வாழ்வதற்கு…

குருவிற்கு முன்
குனிந்து பணிந்து விடலாம்
ஆனால்
மனிதனுக்கு முன் மனிதனாக
நடந்துக் கொள்வதில்
ஞானம்
மனிதனைப்
புனிதனாக்குகிறது…

எந்த பதவி
முக்தியைத் தருமோ
அந்த பதவி
மனித வாழ்க்கைக்கு
சித்தி தரும்…

ஞானம் கற்பது
நாட்டையும் ஆள்வதற்கு;
வாய்ப்பு கிடைத்தால்
ஆண்டு விடலாம்
ஆனால்
நோக்கம் அதுவல்ல…

குரு தந்த அறிவை
அறியாத போது
அதை
அடுத்தவர்களுக்கு
அள்ளித்தர
நாம் என்ன
வள்ளலா…?

மகத்துவை மனதில்
நிலை நிறுத்து முன்
நீதியாய் நிலத்தினில்
நடந்திடல்
வேண்டும்…

இறை ஞானத்தை
விளங்கி வந்தால்
ஒளி விளக்காகி
விடலாம்
விளங்குவதாய்
எண்ணம்
விளக்கம் எண்ணமல்ல…

துன்பமும் துயரமும்
மழையாய்
பொழியும் வேளை
அதில்
நனைகின்றவர்களுக்கு
குடையாய் நிற்பதே
சகோதரத்துவம்…

இது
ஞானம் கற்கும்
பணிமனை
மனிதனை மனிதனாக்கும்
ஆத்ம மருத்துவ மனை
இங்கு
எனக்கு நானே
கண்ணாடி…!

29.ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை…

ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை…

மதங்களை மறந்து
மனிதர்களை
நேசிக்க கற்றுத்தரும்
மகத்துவமிக்க
அவை இது …

கல்லூரிக்கு சென்றாலும்
கிடைத்திடாத
ஏக இறையறிவை
கனிவாய் போதிக்கும்
சபை இது …

முட்களாய்
வீதியில் வளர்ந்த சிலர்
ரோஜா மொட்டுகளாய்
மலர்கிறார்கள் …

கற்களாய் கரைகளில்
கிடந்த சிலர்
இங்கு வைரங்களாய்
ஜொலிக்கிறார்கள்…

ஆம்
இவர்கள்
மனித நேயத்தை
சுவாசிப்பவர்கள்
இங்கு
சுடலைமணி நாடாரும்
சுல்தான் அப்துல் காதிரும்
ஒன்று தான்…

இவர்கள்
மதங்களைக் காரணங்காட்டி
தங்களுக்குள்
பேதச் சுவரை
எழுப்புவதில்லை.
அதை
இடித்துக் கொண்டிருக்கிறார்கள்…
ஆம்
இவர்கள்
மதமற்ற மதமாகிய
மெய்ஞானத்தை
சுவைப்பவர்கள்…

இவர்கள்
ஞானம் கற்பது
ஞானி ஆவதற்கல்ல
மனிதனாக வாழ்வதற்கு…

தனையறியும்
உயர் மெய்ஞானத்தை
பயிர் செய்தால்
அயோத்தியில்
மட்டுமல்ல
அகிலமனைத்திலும்
அமைதி விளையும் …

28.திருக்குர்ஆன்


திருக் குர்ஆன்…

திருக்குர்ஆன்
இது
இறைவனின்
முழுமையான உரையாடல்…

வஹி எனும்
வேத வெளிப்பாடு
‘ஹிரா’ மலையின்
உச்சத்தில்…

அண்ணல் நபிகளுக்கும்
‘ஹிரா’ மலைக்கும்
ஆழமான உறவு…

ஆயிரம் ஆண்டுகளைக்
கடந்து இன்றும்
அண்ணல் நபிகளின்
அசலை அடையாளம் காட்டும்
அகல்…

வேதம்
அகமும் புறமும்
கொண்ட தேகம்
இது ஆத்ம தாகம்
கொண்டவர்களுக்கு
தருவது ‘தீன்’ எனும்
பானம்…

வாழ்க்கை
பயணத்திற்கு -இது
விபத்தில்லாத
வாகனம்…

தேகத்தில் மட்டுப்பட்டு
தேட்டம் கொண்டவர்களுக்கு
ஏகத்திரையை
அகற்றி
அமரச் செய்யும்
ஆசனம்…


நுண்ணறிவோடு
இதில் நுழைபவர்களுக்கு
‘ நூர்’ எனும்
நுண்மையின்
நிர்வாணம்…

அறிவெனும்
ஆயுதத்தால்
ஆழத்தோண்டுபவர்களுக்கு
புதையலாய் கிடைப்பது
பூரணம்…

மனிதர்களையும்
மனிதருள்
புனிதர்களையும்
புவியிர்கு
புகட்டும் புலன்;…

மன நோயுடன்
நடை பிணமானவர்களுக்கும்
உடல் நோயால்
அவதிபடுபவர்களுக்கும்
அருள்புரியும்
மருந்தகம்…

விஞ்ஞானிகளையும்
மெய்ஞ்ஞானிகளையும்
உருவாக்கும்
தொழிற்சாலை…

அறிவு
படித்தரங்களுக் கேற்ப
அறியத்தரும்
பாடசாலை…

நீதியையும்
நிஜங்களையும்
நிறம் காட்டும்
கண்ணாடி…

சரித்திரங்ளையும்
சமுகத்தினரையும்
அவர்கள் செய்த
விசித்திரங்களையும்
விகற்பிக்கும் விளக்கு…

இறந்தவர்களுக்கும்
இறையோடு
கலந்தவர்களுக்கும்
நிறைவோடு
மறை ஒதும் போது
நிறைத்திடும்
ஆத்ம சாந்தி…

புனிதமும்இபுண்ணியமும்
பூரணமான
வேதத்திற்கு முன்;
வேடம் போடுபவர்களையும்
வேய்வு செய்பவர்களையும்
இது
வழி கெடுக்கும்
வல்லாண்மை…

பாமரர்களுக்கு
இது அளிக்கும் பரிமாணம்
துவைதம்…
பதிஞானம் கொண்டவர்களுக்கு
இது வழங்குவது
அத்வைதம்…!

27.மனிதனாய் மலர்வோம்

மனிதனாய் மலர்வோம்…


அண்ணல் பெருமானே
நீங்கள்
சொன்ன சொல்தானே
உலகில் நிஜமானது
அழகில் அழகானது
அதுவே
அறிவில் உயர்வானது…

மாநபி
வருகையினால்
மனிதன்
மனிதனானான்
மன்னரின்
வார்த்தையினால்
மனிதன்
உயர்வானான்
மறையை தந்ததனால்
மனிதன்
நிலையானான்
தன்னை அறிவதனால்
மனிதன்
நிறையாவான் …

அண்ணல் நபிகளை ஆய்தால்
அகத்தினை
அங்கே காண்போம்
ஏகத்தில்
நாமும் கலந்தால்
எண்ணத்தில்
ஏகனை நினைவோம்
தன்னிடம்
தானே மாய்ந்தால்
தண்னிலே
நிதம் மலர்வோம்
உள்ளத்தில்
ஞானம் தெளிந்தால்
இல்லத்தில்
அஞ்ஞானம் கடப்போம் …

இருப்பதெல்லாம்
ஒன்றே
மறுப்பதில் இல்லை
நன்றே
அகத்திலிருப்பது விதையே
அதை
விதைத்துப் பார்த்தால்
இறையே
இதை
அறிய நாடுவோம் குருவை
அந்த
குருவில் காணுவோம்
நிறைவை
மருவை நீக்கிடும் நம்மில்
மனிதனாக்கிடும்
மண்ணில்…!

26.புகழை புகழ்பாடுவோம்

புகழை புகழ் பாடுவோம்…


மது மாது மதி மயக்கம்
மிருகத்தையும் விட
கேடு கெட்ட நிலையில் வாழ்ந்தவர்களை
மனிதனாக வாழவைத்த
மனிதருள் மாணிக்கம்
நபிகள் நாயகம்…
அல்லவா...

இன்னல்கள்
வாழ்க்கையில் பின்னல்கள்
எதிர்நோக்கும் போதெல்லாம்
இறைவா இறைவா என்று
இறைஞ்சல்கள்
அந்த இறையை காட்டி தந்த
உத்தமர்
நபிகள் நாயகம்…
அல்லவா...

அமைதி இழப்பு
அவதிப்படும் உள்ளம்
மனம் ஆறுதல் தேட
‘அல்லாஹ்’வை நினைவு கூற
ஐங்காலத் தொழுகை
வாடிய மனதை மலரச்செய்த
வள்ளல் பெருமான்
நபிகள் நாயகம்…
அல்லவா...

எப்படியும் வாழலாம் என்பது
வாழ்க்கையன்று
இப்படித்தான் வாழ்க்கை என்று
சீறும் செம்மையும்
செப்பனிட்ட தளமாய்
அதுவே ‘ஷரிஅத’; என்ற களமாய்
அமைத்து தந்த பெருந்தகை
நபிகள் நாயகம்…
அல்லவா...

அகிலத்தின் ஆரம்பம்
அதன் முடிவு
‘வஹி’ என்னும்
வேத வெளிப்பாட்டில் முழுமை
அதை
உள்ளத்தில் உறையச்செய்யும்
திருக்குர்ஆன்
அதை பயின்றவர்கள்
‘ஹாபிஸ் ஆலீம்’களாய்
அகிலத்திற்கு அடையாளம் தந்த
அருளானவர்கள்
நபிகள் நாயகம்…
அல்லவா...

பெயருக்கு முன்னால்
‘ஹாஜி’ என்ற பட்டம்
இதை நாம் சுமப்பதற்கு
கல்லடியும் சொல்லடியும்
தன் தேகத்தில் கண்ட
கருணைக்கடல்
நபிகள் நாயகம்…
அல்லவா...

‘சூர்’ ஊதி அகிலங்கள் அழிக்கப்பட்டு
ஜீவராசிகள் மடிந்து
இறைவணக்கம் அற்றுப்போகும்
அந்நாளில்
இறைவன் அவனது மலக்குகள்
‘ஸலவாத்’ என்னும்
நபிகள் நாயகத்தின்
திரு புகழை
அணையாத அகலாய்
அட்சயபாத்திரமாய் பாடும்
மாட்சிமை மிக்க
நபிகள் நாயகம்
நமக்கு சாதாரண மனிதரா…?

அகிலப் படைப்பே
அண்ணல் பெருமானாரின்
அவதாரம்.
‘அல்லாஹ்’ அறியத்தரும் அண்ணலை
புகழ்வது
இணைவைத்தலா…?

படைத்தவன் புகழும் போது
படைக்கப்பட்ட நம்மிடம்
ஏன் இந்த பாரபட்சம்…?

பஞ்சு மெத்தையில்
பட்டு விரிப்பினில்
கட்டியணைத்த நம் மனையாளை
மானே தேன்னே மயிலே குயிலே
சந்திரனே சூரியனே
வண்ணமலரே வாடாமல்லிகையே
இப்படி
அற்ப சுகத்திற்கு
நாம் அள்ளிவிடும் வார்த்தைகள்
இறைக்கு
இணைவைத்தல் இல்லையா…?

அரசியல் தலைவர்கள்
அலுவலக மேலாளர்கள்
பதவிக்காக பொருளுக்காக
பரவசத்தோடு புகழ்வதும்
பெயருக்காக புகழுக்காக
நம்மை சார்ந்தவர்கள்
நமக்கு சம்பந்தபட்டவர்கள்
வார்த்தைக்குள் வராத வார்த்தைகளால்
புகழ்மாலை சூட்டுவதும்
இணைவைத்தல் இல்லையா…?

நமது பெற்றோரும்
நமக்கு கற்பித்தவரும்
சாதாரண மனிதரா
மெய்ஞ்ஞானியும்
விஞ்ஞானியும்
சாதாரண மனிதரா
நாட்டின் பிரதமரும்
மருத்துவரும்
சாதாரண மனிதரா…?

அறிவு படித்தரத்தில் நம்மிடம்
ஆழமான வித்தியாசங்கள்
நம்மை நாம் அறியாத நிலையில்

அகிலத்தின் அருட்கொடை
சத்திய சீலர்
சாந்த நபிகளை
நம்மோடு சரிசமம்
என்பது சரிதானா…?

அறிவின் தந்தை என்று தன்னை
ஆரத்தி எடுத்தவன் ‘அபுஜஹில்’
அவன் முட்டாள்களின் தந்தையான
சரித்திரம் நம் கையில்…

வரிந்து கட்டியவரெல்லாம்
வழுக்கி விழுந்து
மண்ணைக் கவ்விய வரலாறுகள்
நம் வாசிப்பில்…
அதனால்
அண்ணல் நபிகள் சாதரண மனிதரும் அல்ல
அவர்களை புகழ்வது
இணைவைத்தலும் அல்ல…

சாதாரணமும் இணைவைத்தலும்
சத்தியம் விளங்காதவர்களுக்கே…
அதனால்
தூசிகள்;என்றுமே சூரியனை
மறைக்க முடியாது…!

25.தொப்பி

தொப்பி …

தொப்பி போட்ட
இஸ்லாமியர்
பள்ளிவாசலுக்கு
தொழச் சென்றார்…

பின் வரிசையில்
சிறுவர்கள்
தலையில் தொப்பி யோடு …

முன் வரிசைக்கும்
பின் வரிசைக்கும்
இடையில்
வெறும் தலையுடன்
இளைஞர்கள்…

அமைதியான
தொழுகைக்கிடையில்
ஹனபிபள்ளியில்
ஆமீன் - என்ற
ஆவேசக் குரல்கள்…

சலனமற்ற இறை
சந்திப்பில்
சிலரால்
சிதறும் சிந்தனைகள்…

நிலை நாட்டப்பட
வேண்டிய தொழுகை
நிலை குலைகிறது…

தொப்பி போடுவது
பர்ளா ? சுன்னத்தா ?

சிலரது ஆத்திரக்
கணைகள்…

இஸ்லாம்
அறிவுப்பூர்வமான
மார்க்கம்-என்று
மேடையில்
பேசினால் மட்டும்
போதாது…

தலைமுடி உதிர்வை
தடுக்கும் கவசம்
தொப்பி…

அதை அணிவதால்
விளைவது
பள்ளித் தூய்மை…

இதை
ஏன் இவர்கள்
மறுக்கிறார்கள்
அல்லது
மறைக்கிறார்கள்…!

24.வரலாறு

வரலாறு…

நிகழ்வுகளின்
உதயமே
சரித்திரங்கள்…

உதிர்ந்து போன
இலைகளுக்கும்
உதிரம் சிந்திய
உத்தமர்களுக்கும்
உளமையான
சரிதைகள்…

வாசிக்கப்படும்
வரலாறுகள்
சிலரது
வஞ்சனைக்குள்…

கற்பனைகளுக்கும்
காட்சிகளுக்கும்
இடையில்
கட்டுக்கதைகள்
இது
தொலைகாட்சிகளில்
தொலைத்து விட்ட
நேரங்களில்…

மார்க்கம் இன்று
தர்க்கங்களுக்கும்
தடுத்தாளுதல்களுக்கும்
மத்தியில்…
சிலரால்
அமைக்கப்பட்டிருப்பது
தளங்கள்…

சஹாபாக்களும்
இமாம்களும்
பிழிந்து தந்த
சாராம்சத்தினை
மீண்டும்
பழத்திற்குள் செலுத்தும்
முயற்ச்சிகள்…

‘ மதஹப்புகள்’
அவசியமா ?
குறுக்கு
விசாரணைகளோடு
குருடர்கள்…

நான்கு
மதஹப்புகளுக் கிடையில்
அஞ்சாவது
நாத்திகம் போல்…

தீண்டாமைகள்
இன்னும்
வாழ்ந்துக்
கொண்டிருக்கிறது
‘லயீப்’ என்னும்
பல ஹதீஸ்கள்
தீண்டாமைகளோடு…
அவ்லியாகடகளும்

அன்பியாக்களும்
அச்சமும்இதுக்கமும்
படுமளவு
அஞ்ஞானிகள்…

சத்தியங்கள்
இப்போது
சில்லரை கடைகளில்
மலிவான
விற்பனையில்…

ஒற்றுமை என்னும்
கயிற்றை
விட்டு விட்டு…

வேற்றுமையின்
வேர்களை
ஆழத்தோண்டி
புதைக்கப்படும்
பரிதாபங்கள்…

இவர்களுக்கு
இடையில்
மாற்றான்
தோட்டத்து மல்லிகைகளில்
சிலர்…

இஸ்லாம்
வாளால்; புறப்பட்டது
என்று
முடிசூடும்
முன்னுரைகள்…

வாளால் புறப்படுவது
மார்க்கமல்ல
வாளால் தற்காத்துக்
கொண்டதே
மெய்யுரைகள்…

இவைகள்
அனைத்தும்
ஆரோக்கிய
வளர்ச்சிகளுக்கு
அப்பால்…!

23.தர்ஹாவாசிகள்

தர்ஹா வாசிகள்

மதங்களைக் கடந்து
மனிதர்கள்
சங்கமிக்கும் இடம்
தர்ஹா…

வேண்டுதல்
வேறுபட்டாலும்
நம்பிக்கை
மாறுபடுவதில்லை…

ஏழை பணக்காரன்
என்ற
ஏணிப்படிகள்
இல்லாத இடம்…

நம்பி வருபவர்கள்
பலர் நலத்துடன்
கரையேறுவது
வெறும்
கனவு கதையல்ல…

மஹான்கள்
மனிதர்கள் தான்;
ஆனால்
உள்ளுறை உணர்ந்து
உள்ளத்திலும்இஎண்ணத்திலும்
சிந்தனையிலும்இ
செயலிலும்
இறையுடன் நிறைவோடு
நித்தியவான்களாய்
நிறைந்தவர்கள்…
இவர்கள்
அச்சமில்லாதவர்கள்
துக்கமில்லாதவர்கள்
என்பது
தூயவன்
தூவும் தூறல்…

இறைவனிடம்
கேட்க வேண்டியதை
மஹான்களிடம்
கேட்பதா…?

இது
புரியாத
புதியவர்களின்
பூஜிய புறப்பாடு…

எங்கும் நிறைந்த இறை
இங்கும் நிறைவதே உளம்.

இது
இறைவனுக்கு
இணை வைத்த லென்று
தங்கள்
தழிழ் நாட்டு தலைவர்கள்
சொன்னதை
துணை வைத்து
வாதாடல்கள்…

வேதத்தை காண்பித்து
இவர்கள் செய்வது
வேய்வுகள்…

அண்ணல் நபிகளை
ஆழமாக ஆய்ந்தால்
இறைவனையும்
இணை வைத்தலையும்
இலகுவாக காண முடியும்
இனம்…

பாரபட்சமில்லா
ஆய்வினால்
மட்டுமே
பரம் பொருளை
விளங்க முடியும்…!

22.அறிவைத்தேட குருவை நாடு

அறிவைத் தேட குருவை நாடு…


குரு அவசியமா?

குழப்புகிறது ஒரு கூட்டம்
குறுகிய நோக்கத்தில்
குர்ஆனை படித்து விட்டு
குறுக்கு வழியில் வந்த
குதர்க்கவான்கள்
இவர்கள்…

ஹதீஸை
அலசி விட்டோம்
அதனால்
அண்ணல் பெருமானார்
எங்களுக்கு
அண்ணன் என்று
சொல்லும் இவர்கள்…

சரித்திர நாயகர்கள்
இவர்களுக்கு
சாதாரண மனிதர்கள்…

சத்திய மறியாத
சாதாரண மனிதனுக்கு
சரித்திர நாயகர்களும்
சர்வமும் இவர்களுக்கு
சாதாரணம் தான்…

குரு என்பது
மனித வழிபாடல்ல
மனிதனை மனிதனாக
வாழவைக்கும்
வழிக்காட்டல்…

அறிவை
அறிவைக் கொண்டு
அறிய வேண்டுமென்ற
தத்துவத்தை-நாம்
அறிந்திருக்கிறோமா.?


சம்பூரண மார்க்கத்தை
பூரணமாகப்பார்ப்போம்
இமையை மூடினால்
இம்மை இல்லை என்ற
பூனைக் கதையை
பூரணத்தில் புகுத்தலாமா?

உலகத்தை
உரசியிருக்கலாம்
ஆகாயத்தை
அலசியிருக்கலாம்
ஆனால்
நம்மை நாம் அறியாத போது
நம் உள்ளம் இருள்…

பிறப்பிலிருந்து
இறப்பு வரையில்
குருவின்
தொடர்பு…

பிறப்பதற்கும்
வளர்ப்பதற்கும்
பெற்றோர்கள்
குரு…

பள்ளிச் சென்று
பயிலும் போது
ஆசான்
குரு…

பள்ளி வாசல் சென்று
பலருடன் தொழும் போது
இமாம் குரு…

நம்மை
இயக்குவதற்கும்-நாம்
இயங்குவதற்கும்
இருக்கிறது
குருவின் இலக்கு…

அரிச்சுவடி
அறிந்து விட்டதினால்
கல்லூரிக்கு
ஆசான்
தேவையில்லை யென்று
கூற முடியுமா நம்மால் ?

அது முடியாத போது

அல்லாஹ்வின்
வேதத்தை
ஆசானின்றி அறிய
நினைப்பது
அல்லாஹ்வை அறிய
ஆசான்
தேவை யில்லை-என்று
கூறுவது
ஆதாரமாவது எப்படி.?

பிறக்கும் போது
சம்பூரணத்தையறிந்து
பிறந்து விட்டோமா.?

ஆகாயத்தை நோக்கி
உமிழும் உமிழ் நீர்
நம் முகத்திலேயே
உதிர்ந்துக் கொண்டிருக்கிறது
உணர்வோம்…

அனைத்திலும்
அனைத்துமாயிருக்கிறான்
அல்லாஹ்…

ஆகாயத்தை மட்டும்
பார்த்துக் கொண்டிருப்பதால்
ஆதாரமாகி விடாது…

ஆதாரத்திற்கு
ஆதாரம் தேடுவதை விட்டு
ஆணவத்தை
அறுத்தெறிந்து
அறிவைத்தேடுவோம்
அறிவைத் தேட
சற் குருவை நாடுவோம்…!

21.இறையறிவே இறுதியறிவு

இறை அறிவே இறுதி அறிவு …!


இறைவா
நீ எங்கே இருக்கிறாய்
எப்படி இருக்கிறாய்
எது வாக இருக்கிறாய்
உன் இருப்பிலே எனக்கு
குழப்பம்…

ஏழு வானங்களுக்கு மேல்
அர்ஷிலே
ஆட்சியமைத்திருப்பதாய்
கூறுகிறாய்…

‘உன் பிடரியின்
நரம்பிற்கும் மிக சமீபமாய்
இருக்கிறேன்
கூப்பிட்ட குரலுக்கு
பதிலளிக்கிறேன்’
என்று
உன் வேதத்தில்
வாதம் செய்கிறாய்…

எத்தனையோ
கஷ்டங்களில்
நஷ்டங்களில்
அழுகின்றேன்
உன்னை அழைக்கின்றேன்
என் குரலுக்கு
உன்னிடம் பதில் இல்லை
ஏன்…?

இறைவா
தெளிவான
வேதம் தந்தாய்
அறிவான
ஆசான் தந்தாய்
விரிவான
விளக்கம் தந்தாய்
அதை
விரித்து பார்க்க
என் விழி
வழிச் செல்ல வில்லையே…

பாவியாய்
உன் வேதத்தை படித்து
கொண்டிருப்பதால்
பார்வையிலும்
நீ யிருப்பதை
பார்க்காத
எனதறிவில்
உனை
எங்கேயோ
வைத்து விட்டது
என் எண்ணம்…!

இறைவா
கண்களால் காணமுடியாத
பரம் பொருளாயிருக்கிறாய்
அறிவிலே உனை
அலசும் போது
அறிவாகி
புறக்கண்களுக்கும்
ஆளுமையாய்
காட்சியளிக்கிறாய்...
உனை
விளங்கும் போது
ஒளியிலும் புரிகின்றேன்
விளங்காத போது
இருளாய் மட்டுமே
பார்க்கிறேன்…

அகிலத்தின்
அருட்கொடை
அண்ணல் எம்பெருமானாரை
நேசித்தால் தான்
இறைவா
உன்னின் உண்மை
என் அறிவுக்குள் உலாவரும்…

உயர்வான உன் வேதம்
உம்மி நபியின்
உரைப்பினால்
உயிர் வாழ்கிறது
இறைவா…

உன்னுடைய
ஆட்சியையும்
ஆளுமையையும்
நீ நிகழ்த்தும்
அதிசயங்களையும்
அறிந்து விடுவதினால்
நான் உன்னை
அறிந்ததாய் ஆகிவிடுமா…?

இந்த பிரபஞ்சத்தை
படைப்பதற்கு முன்
நீ மட்டுமே இருந்தாய்.
படைப்புகளை
படைத்துப் பார்க்க
உனக்கு ஆசை
‘குன்’-என்று சொல்லி
அனைத்தையும் படைத்து
அனைத்துமாகி விட்டாய்
என்னிலிருந்து
உன்னை
எப்படி
வேறுபடுத்தமுடியும்.
அது
மாறுபாடல்லவர்

உன்னை என்னிலும்
என்னை உன்னிலும்
காணவில்லையெனில்
இணை வைத்துவிட்டேன்
இறைவா
உனக்கு
இணை வைத்துவிட்டேன்.!

20.பிரமசாரிகள்

பிரமசாரிகள்…

வாழ்க்கை
பிரமசாரத்திலிருந்து
துவக்கம்…

திருமணங்கள் அமைவதெல்லாம்
மனங்கள் தேடிய வரம்…

வாழ்க்கை
சிலருக்கு பிரமை
பலருக்கு பிரமாதம்…

வாழ்க்கைப் பயணத்தை கடப்பதற்கு
திருமணமாகி சிலர்
பிரமசார வேடத்தில்
பயணம்…

கரம் நம்பி
கரைக்கடந்தோம்
நம்பிக்கைகளில்…

நினைவுகள்
நித்தமும் நித்திரைக்கு முன்
மன அரங்கில் ஒடும்
திரைப்படம்…

தொலைபேசியில் தொடரும்
வாழ்க்கை நிகழ்வுகளின்
வரைபடம்…

பிறந்த குழந்தையை
அள்ளிஎடுத்து
நெஞ்சோடு அணைத்து
முகர்ந்து முத்தமழை
பொழிவது
நிழற்படங்கள்…

பொருள் சேர்க்க
பொறுமையுடன் காத்திருக்கும்
வெறுமை வாழ்க்கை…

உணர்வுகளும்
உணர்ச்சிகளையும்
முடிச்சுப்போட்டு வைத்திருக்கும்
முந்தானைகள்…

நாங்கள் விடும்
மூச்சு காற்றுக்கும்
கொடுக்கப்படுவது
வாடகை…

நாட்டைகாக்க
இராணுவவீரர்கள் எல்லைகளில்
வீட்டைக்காக்க
எல்லைத் தாண்டி
நாங்கள்…

தாயகம் திரும்பும்
விடுமுறைகளில்
தாகமில்லை
தாழமுமில்லை
வீடு சேரும் வரையில்
மனமெல்லாம்
மின்னிடும் விண்மீன்கள்…

பொருளை சம்பாதிக்க
இளமையை சிலவளித்தோம்
இளமையை சம்பாதிக்க
எதை சிலவு செய்வது…?

இது எங்களின்
சோகக்கதை அல்ல
வாழ்க்கை கதை…!

19.கோபம்

ஆறுவது சினம்


கோபம்
கொடிய நோய்…

இந்த நோய்
இல்லாத மனிதர்களை
காண்பது பொய்…

சினத்தால்
சினேகிதம்
சிதைந்து போவது
மெய்…

கோபம்
வாழ்கையின்
வழிதடத்தை
மாற்றி விடும்
கோணம்…

கருத்துக்கள்
கருவாகி
கருநெறியில்
கருச் சிதைவு…

நான் நீ என்ற
போட்டிகளில்
பொடிகளாய் போகும்
பொறுமை…

யாருக்காகவோ
வாழ்க்கையை
தொலைத்து விட்டு
தனக்காக
வாழ்பவர்களை
தவிக்க விட்டு
தலையிறக்கும்
வெறுமை…

மதச் சண்டைகளும்
மதில் சண்டைகளும்
மந்தனமில்லாத
மமதையில்…
அரசியலும்
அதிகாரங்களும்
சினம் என்ற
அறுவடையில்…

சின்ன சின்ன
சினத்தினால்
சிதறிவிடும்
சிந்தைகள்…

கட்டுபாடில்லாத
கனற்சியில்
கலைந்திடும்
கடைசி நிமிட
சாதனைகள்…

கோபம்
குடியிருக்கும்
இல்லத்திலும்
உள்ளத்திலும்
விடைபெற்று விடும்
அமைதி…

இரத்த கொதிப்பும்
பித்த திலைப்பும்
கோபத்தின்
வருமானங்கள்…

கடவுளை இழப்பது
கர்வம்
நண்பனை இழப்பது
பொறாமை
தன்னை இழப்பது
கோபம்
இது முதுமொழி…

கோபம்
கொளுந்து விட்டு
எரியும் பொழுது
நீரினில்
நீராடினால்
நிவர்த்தியாகும்.
இது
நிவாரணம்…!

18.ஆயிரத்தி ஒரு ரூபாய் மணமகளுக்கு

ஆயிரத்தி ஓரு ரூபாய் மணமகளுக்கு…

வாழ்க்கை ஒப்பந்தங்கள்
இன்று
வியாபார சந்தைகளாக…

‘மஹர்;’ கொடுத்து
மணக்கவேண்டிய நங்கைகள்
பணமும்
தங்கநகைக் கடைகளுமாய்
நகர்வலம்…

அன்று
பெண் சிசுக்கள்
கருவறையின்
ஈரம் காய்வதற்கு முன்
மண்ணறைக்குள்…

இன்று
கன்னிப்பெண்கள்
மணவறை காண
வாழ்க்கையின் நிர்ணயம்
சில்லரைக்குள்…

வசதியற்றவர்கள்
வயதை கடக்கும்
தன் பெண்ணுக்கு
மாப்பிள்ளை சந்தையில்
பேரம் பேச முடியாத
ஊமைகள்…

பெற்றோர்களின்
சொல்லைத் தட்டும்
சில இளைஞர்கள்
திருமண விசயத்தில் மட்டும்
தீர்க்கமாய் தலைக் குனியும்
நாணிகள்…

திருமணத்தின் போது
தீவிரமாய் வாசிக்கப்படும்
ஆயிரத்தி ஒரு ரூபாய் மணமகளுக்கு…

தீன் முறைப்படி
திருமணம் என்று
அச்சடிக்கப்படும்
அட்டைகள் பேசும்
ஆனால்
ஆயிரத்து ஒன்றை
அளித்துவிட்டு
பல
ஆயிரங்களை பறிக்கும்
அடுக்கு வட்டிகள்…

கொடுக்கல் வாங்கலில்
குறை நிறைந்தால்
மணமகள் வாழ்க்கையில்
விழுவது திரைகள்…

‘ஷரியத்’ என்னும்
சட்டதிட்டத்தை
செயற்படுத்தாதோர்
சமுதாயத்தின்
சலனத்துக் கஞ்சுதல்கள்…

பெண் வீட்டாரை
நிர்பந்திக்காத நிக்காஹ்வும்
ஏழை வீட்டு பெண்ணை மணக்கும்
மனங்களும்
ஏகனின் அருளுக்கு
ஏற்றமுடையவர்கள்…!

17.நிம்மதி

நிம்மதி…

பெற்ற அன்னையை
பேணிக் காப்பதில்
நிறைந்து விடும்
நிம்மதி…

வளர்த்த தந்தையை
வாட விடாமல்
வாழ வைப்பதில்
கிடைத்து விடும்
நிம்மதி…

தம்மை நேசிக்குமளவு
பிறரையும் நேசிக்கும் போது
மலர்ந்து விடும்
நிம்மதி…

அண்டை வீட்டாரிடம்
அன்போடு
பழகும் போது
நம்மை அணிந்து கொள்ளும்
நிம்மதி…

உதவிக்கு முன்
உதவுவதில்
உறவு தரும்
நிம்மதி…

அறிவைப் பெற
ஆசானிடம்
நம்மை அர்பணிக்கும் போது
அஞ்ஞானம் போக்கிடும்
நிம்மதி…

மனிதன் மனிதனாக
வாழும் போது
மகுடம் சூட்டி விடும்
நிம்மதி…

நிம்மதி நம்மிடம்
நிறைந்து இருக்கிறது
நாம் வேண்டினால்
நம்முள்ளும் வரும்…!

16.பிரிவு

பிரிவு…

கருவறையை
பிரிந்த பொழுது
நான் அழுதேன்…
பள்ளிக்கு அனுப்பி விட்டு
தாய் அழுதாள்…

கல்லூரி படிப்பு முடிந்து
நாங்கள் அழுதோம்…

காதலை பிரிந்து
காதலர்கள் அழுகிறார்கள்…

கணவனை பிரியும் பொழுது
மனைவி அழுகிறாள்…

உயிர் பிரியும் பொழுது
உறவு அழுகிறது…

பிரிவு என்பது
காலமும் தூரமும்
செய்த நிர்ணயம்…

எண்ணத்திலும்
உள்ளத்திலும்
நினைவு
வாழுகின்ற பொழுது
எது பிரிந்தது… ?

உடல்
காற்று ஊதப்பட்ட
பந்து- அது
ஆன்மாவால்
அலங்கரித்துக்-
கொண்டிருக்கிறது.

எங்கிருந்து
புறப்பட்டோமோ
அங்கே
சேர வேண்டுமென்பது
நியதி…!

15.அன்னை

அன்னை…


ஆயிரம் பெண்களை விட
சிறந்தவள்
அன்னை…

இறைவன் படைப்பில்
நிறைவான படைப்பு
மனிதன்…
தாயின் கருவ+லமே
இறைவனின்
ஆதாரம்…

தாயின் காலடியில்
சொர்க்கம்
‘தாஹா’ நபிகள் சொன்ன
சொக்கம்…

உதிரத்தை அமுதமாக்கி
உறவை அன்பாக்கி
உயிரை அடைகாக்கும்
களஞ்சியம்
அன்னை…

பிறப்புக்கும்
உறவுக்கும்
சான்றிதழ் அளிப்பவள்
அன்னை…

பிள்ளைகளின்
உழைப்பை விட
சரிரத்தின் நலனில் மட்டுமே
கவனம் கொள்ளும்
அகல் அன்னை…

லட்சங்களை சம்பாதித்தாலும்
தாயிடம் நேசமில்லை எனில்
வாழ்க்கையில் இல்லை
லட்சணம்…

தேடி தேடிச் சென்றாலும்
தேவையானதை தேடலாம்
ஆனால் அன்பை
அவள் மட்டுமே அளிக்கும்
அமுதசுரபி அன்னை…

தாயிடம் ச்சீ…என்ற
வார்த்தையை எவன்
உதிர்த்தானோ
அவன் நீசன் என்று கூறும்
அல் குர்ஆன்…

அன்னை
அரிச்சுவடி கற்றுத்தரும்
ஆசிரியை
நடைபயில வைக்கும் நாயகி
அறிவை புகட்டும் ஆசான்
நோய் தீர்க்கும் மருத்துவர்
அழகுபடுத்தி அழகு பார்க்கும்
கலைஞி
பசியை போக்கும் பயிர்…

அன்னைக்கு நிகர்
அவளே…!

14.அரசியல்

அரசியல்…

அரசியலில்
நேர்மையான தலைவர்கள்
வாக்கு மாறாத
அமைச்சர்கள்
மக்கள் சேவையே
தங்கள்
தேவையெனக் கருதி
அயராது உழைப்பவர்கள்
அரசு உடமைகளை
தங்கள்
சுயநலத்திற்கு
உபயோகிக்காதவர்கள்
பொது நலமே
அவர்களின் பொழுதுபோக்கு
இவையெல்லாம்
நான் படித்த சரித்திரத்தில்…

கடமைத் தெரியாத
கண்ணியம் விளங்காத
கட்டுப்பாடில்லாத
அரசியல் வாதிகளுக்கு
மத்தியில்…

கொலைகள் கொள்ளைகள்
கற்பளிப்பில் தேர்ச்சி
இவையே
இன்றையஅரசியலின்
வளர்ச்சி…

அரசியல் என்பது
சூதாட்டம்
ஆட்சிமுறை அமைப்பதற்கு
ஆடும் பித்தலாட்டம்…

ஆட்சியாளர்கள்
தவறுகள் செய்யாமலிருக்க
மக்களின் பாதைகள்
நேர்மைகளில்…

தலைவர்களையும்
தகுதியானவர்களையும்
தேர்ந்தெடுக்கும் பொறுப்புகள்
நம் கைகளில்…

கைகள்
நம்மிடம் இருக்கும் வரை
அவர்களின் தலையெழுத்து
நம் தூரிகைகளில்…

நல்லாட்சி நல்குவதற்கு
மக்கள் சிந்திப்பவர்களாக
அல்லது
ஆட்சியாளர்கள்
மக்களைச் சிந்திப்பவர்களாக
இருத்தலே சீர்மை…

கலீபாஹக்களின் ஆட்சிமுறை
இந்தியாவில்
மலரவேண்டும் என்பது
மகாத்மா காந்தியின்
ஒருமைப்பாடு…

இருண்டகாலங்த்தில்
வெளிச்ச
அரசியல் தந்தார்கள்
அபுபக்கர் சித்தீக் (ரலி)…

வாழ்க்கையின் தேவைக்கு
வணிகம் செய்தார்
ஆட்சிதலைவராக ஆனபின்னும்
வணிகமே …

தோளில் துணிச் சுமை
வெற்றுக்காலுடன்
வீதியில் வந்தபோது
ஒரு குரல்…

நாடாளும் மனிதர்
வீதியில் வணிகராய்
வந்தால்
நிர்வாகம் யார் கையில்…?

இந்த குரலுக்கு
சொந்தக்காரர்
கலீபாஹ் உமர் (ரலி)…

வணிகம் செய்கிறேன்
வயிற்றுப் பசிக்கு
என் குடும்பம் பொறுப்பை
யார் ஏற்பது
பதிலுரைத்தார்கள்…

இவைகள்
கற்பனை அல்ல
நிகழ்ந்த காலத்தின்
சத்தியம்…

இவை
படிக்க சுவைக்கும்
நடைமுறைப்படுத்த..?

முயன்றால்
முயற்ச்சிகள்
முற்றுப்பெறுவதில்லை…

இன்றைய தலைவர்களின்
குடும்பங்கள் வளர்ச்சி
அரேபிய நாட்டு
ஆட்சியாளர்களைப்போல்…

தன்னை உணர்ந்த
தலைவனே
மக்கள் தேவையினை
தீர்க்கும் சீலன்…

கல்லூரிகளில்
நுழைவுத் தேர்வு
எழுதுவதைப் போல்
ஆட்சி பீடங்களில்
அமருபவர்கள்
நல்லாட்சி தந்தவர்களின்
வாழ்க்கையை படித்து
எழுதவேண்டும் தேர்வு…

தேர்வில் தேர்ச்சிமட்டுமல்ல
வாழவும் வேண்டும்
தவறுபவர்கள்
ஆட்சியிலிருந்து விலக்கி
கொடுக்க வேண்டும்
தண்டனை…

இவைகளை
நடைமுறைப் படுத்துவதற்கு
நான் தயார்
ஒட்டுப்போட
நீங்கள் தயாரா…?