Sunday, October 02, 2011

மனிதநேயம்


என்னை நேசிக்குமளவு
உங்களை
நேசிப்பதுதான்
மனிதநேயம்

பலர்
நேயத்தை மறந்து
காயத்தை
நேசிக்கிறோம்…
தன்னை
அறிந்தவனுக்கு
விளங்கும்
மனித நேயமென்பது
உதவி அல்ல
உரிமை என்று.!

Sunday, March 13, 2011

இனி

இனி
என்ன தயக்கம்
ஏன் நடுக்கம்
எதற்கு முடக்கம்
இன்னுமா மயக்கம்
போதும் சுனக்கம்
வேண்டாம் சிடுக்கம்
புறப்படு
அதோ மனிதச்சாலையில்
நடந்திடுவோம்
தமிழனாக.!

Sunday, October 17, 2010

காதல்



பலருக்கு தேகத்தில்
சிலருக்கு
அது கிடைக்காத
சோகத்தில்
காதல் ...!

Sunday, September 26, 2010

இறை வணக்கம்



வணங்க வேண்டும்

இறைவனை
வணங்கவேண்டும்.!

அவனைத்தான்
வணங்குகின்றோமா?

Thursday, May 06, 2010

தமிழ்


நான்
மொழியில்லாதபோது
அன்னை மொழிந்தாள்
தமிழ்...

நான் மொழிந்தபோது
என்னை மொழிந்தது
தமிழ்!

Friday, December 25, 2009

இசையும் பாடலும்


இசை
ஜீவன்களை
இணங்க வைத்து
அசைக்க வைக்கும் ஆதி
குன் என்ற ஓசையில்தான்
இந்த
உலகத்தின் ஜோதி.

ஓசையில்தான்
மனிதனுக்கு பிறந்தது ஆசை
ஆசையினால்
மனிதன் மறந்துபோனான்
தன் சுய ஓசை.

"ஹு" என்ற ஓசையின் முடிவே
"ஓம்" என்ற நாதம்
சுரங்களை சுரக்க வைக்கும்
இவைகளில்
இல்லை பேதம்.

பிறப்பு இசைத்தால்
தாயிக்கு ஆதாரம்
பூக்கள் இசைத்தால்
தேனுன்னிகளுக்கு ஆகாரம்
பூகம்பம் இசைத்தால்
மனிதனுக்கு சேதாரம்.

காற்றின் இசையை யாரும்
கற்றுக் கொள்வதில்லை
கடலின்இசையை நாம்
கவனிப்பதில்லை
இயற்கையின் இசையை
நாம் இயற்றுவதில்லை
பசியின் இசையை நாம்
உணர்வதில்லை

இசை
மனிதனை வாழச் செய்கிறது
மனிதனுக்குள் வாழவும் செய்கிறது.!

Tuesday, November 24, 2009

தியாகத் திருநாள்


நபி இபுராஹிமுக்கு
நழுவிப்போன நனவில்
அவரைத் தழுவிக்கொண்டது
நான்-என்ற எண்ணம்...

தவமிருந்து தரித்த தனையனை
தத்துவமறந்து தழுவியதால்
அல்லாஹ் ஆணையிட்டான்
அறுத்துவிடு...

அவரின் ஏகஉள்ளமையில்
ஏற்பட்ட தடுமாற்றம்
பெற்றபாசம்
படைத்தவனை
எண்ணத்திலிருந்து
பாலையாக்கியது...

நான்-என்ற சுயநலத்தை
அறுத்து
நாம் என்ற சுயத்தை
அருந்த வேண்டிய ஆணை...

இருப்பதும் இல்லாமையும்
இறையாகும் போது
அறுப்பதும் அறுக்கப்படுவதும்
பேதமாவதில்லை...

அறுப்பது நானாக இருந்தாலும்
அறுக்கப்படுவதில்
நான் இருக்கவேண்டும்
அது தான் குர்பான்...

இது தீர்க்கதரிசிக்கு
இறைவன் தந்த
தீர்ப்புமட்டுமல்ல
தீனோர்க்கு இட்டகட்டளை...!

Sunday, November 15, 2009

நாம் விடையா வினாவா…?



தன்னை அறிய நாடியது
விடை
பிரபஞ்சமானது
வினா…

வினாவும்
விடையும்
வேறு வேறு
கோணங்களல்ல
கடலும் அலையும்போல
தங்கமும் நகையும்போல…

விடைகளைத்தேடி
பயணிக்கிறோம்
நாம்
வினாக்களல்ல…

விடைகளால்
தடுக்கப்படுபவைகள்
வினாக்களால்
உடைக்கப்படுகிறது…

தேர்வு
விடைகளுக்கல்ல
வினாக்களுக்கு…

விழுந்தது
விடையானதால்தான்
நியூட்டன்
வினாவானான்…

இருளும் ஒளியும்
விடையானதால்தான்
எடிசன்
வினாவானான்…

அறியப்படுவதெல்லாம்
விடைகளல்ல
ஆனால்
அனுபவிக்கப்படுதெல்லாம்
வினாக்கள்…

வாழ்க்கை
விடையாகத்தான் இருக்கிறது
பலருக்கு
வினாக்கள் தெரியவில்லை

விடைத்தேடும்
விடைகள்
வினாக்கள் ஆவதில்லை
வீணாகிக் கொண்டிருக்கிறது…

விடை
மர்மமல்ல
வினாத்தான்
கர்மமாக இருக்கிறது…

நாம் யார் என்று
வினாவைக் கேளுங்கள்
நாம் என்றே
விடைக் கொடுக்கும்…

அதனால் சொல்கிறேன்
நாம் வினாக்கள் அல்ல
விடைகள்…!

Monday, October 12, 2009

பணமா..? குணமா...?


பணம்
மனிதனை மனிதனிலிருந்து
மாற்றி விடும்
குணம்

இதைத்தேடுவதில்
தன்னை
தொலைத்துக் கொள்ளும்
மனித இனம்

கேட்டதும்
கொடுக்கவில்லையெனில்
உறவுக்குள் ஏற்படும்
சினம்

வழிபாடுகள்
வேறுபட்டாலும்
கொடுக்கல் வாங்கலில்
உடன்படும்
மனம்

வெட்டிக் கொள்வதும்
கட்டிக்கொள்வதும்
பணத்தினால் ஏற்படும்
மனஊனம்

செத்தும் கொடுத்தவர்களும்
சொத்தையே கொடுத்தவர்களும்
பலரின் வாழ்க்கைக்கு
பாலம்

குணம் மிகைத்தவர்கள்
இனம் வகையில்லாமல்
என்றும் கொடுப்பார்கள்
தானம்

கொடுப்பதற்கு இருந்தும்
பறிப்பதற்கு பாயும்
பணப்பிச்சனின் உள்ளம்
சாணம்

பணம்தான் வாழ்க்கை
என்பவர்களிடம்
இல்லை குணம்
அவர்களிடம் இருக்கும் உயிர்
என்றும் பிணம்…!