திங்கள், ஆகஸ்ட் 31, 2009

விடியல்



விடியலுக்காக காத்திருக்கும்
விசுத்தமில்லா மனிதர்கள்
விதியை நொந்து
மதியைமறந்து
மயக்கமுறும்
மத்தனர்கள்

இவர்களுக்கு
தெரியுமா...?

மனிதன் மனிதனாக
வாழாதவரையில்
நாட்கள்
விடிவதில்லை
தன்னை அறிந்த
மனிதனுக்கு
வாழ்க்கை
விடியாமல் போனதில்லை...!

புதன், ஆகஸ்ட் 26, 2009

சாரல்


பெய்துக் கொண்டிருக்கிறது
சிலர் நனைகின்றோம்
பலர் நகர்கின்றோம்
எல்லையில்லாத்
தேவைகளைக் கூட்டியதால்
தேடலில் தொலைகின்றோம்...

தன்னிடம் கிடைப்பதை
விட்டுவிட்டு
தானையமாய் திரிவதில்
நாம் தீவிரவாதிகள்...

சுயநலம் என்பது
நமக்கு
மற்றவர்களோடு அல்ல
நம்மிடமே...

அனைத்தையும்
ஆசைக்கு அடகுவைத்து விட்டு
அந்த அனைத்திலும்
தன்னை மீட்க தவறுகிறோம்...

சின்ன சின்ன அறிவுகளில்
சிறைப்படும் நம்மால்
சம்பூரண அறிவுப்பெற்று
விடுதலையாகத்
தெரியவில்லை
பெய்வது
ஞானமழை
சாரலுக்கு தேவையில்லை
குடை...!

சனி, ஆகஸ்ட் 22, 2009

மறதி



நினைத்து நினைத்து
நிம்மதி இழக்கவைக்கும்
நினைவுகள்...

மறதி இல்லையெனில்
மனிதனிடம்
வாழ்க்கையில்லை
மறப்பதால்
மனம் மலர்கிறது
வாழ்வு சுவைக்கிறது....

மன்னிக்க தெரிந்திந்தவர்களும்
மறக்க துணிந்தவர்களும்
மாசில்லா மனிதர்கள்...

நிகழ்வை
மறந்தவர்களுக்கு
அதை நினைவுப்படுத்தி
அதில் நிம்மதி காண்பவர்கள்
நிகாதனர்கள்...

மறக்க வேண்டியதை
நினைப்பதும்
நினைக்க வேண்டியதை
மறப்பதும்
மனித குணமல்ல...

அன்பை மறப்பவன்
அனாதை
பண்பை மறப்பவன்
பாதகன்
பாசத்தை மறப்பவன்
பாவி
நீதியை மறப்பவன்
நீசன்
தன்னை மறப்பவன்
தாசன்...

நீக்கமற கலந்திருப்பவனை
நித்தமும் மறப்பதினால்
நீ நானெனும் வேற்றுமை
பிறக்கிறது
தெளிய வேண்டிய
ஒற்றுமை மறக்கிறது
அதனால் நேயம்
மரணிக்கிறது...!

சனி, ஆகஸ்ட் 15, 2009

கொடை



வறுமை வெறுமையாவதற்கு
வளமானவர்கள்
வள்ளலாகவேண்டும்

வாரிஇரைக்க வேண்டாம்
ஏழைகளுக்கான
வரிகளை வரம்பு மீறாமல்
வழங்கினாலே
நாம் வள்ளல்தான்

மதம் பார்த்து கொடுப்பது
கொடையல்ல
மனிதம்மறிந்து அளிப்பதே
கொடை

செத்தும் கொடுத்தார்
சீதாகாதி
இவரைப்போன்றவர்களை
இன்றும் இறவாமல் செறிவுடன்
வாழ்த்திக்கொண்டிருக்கிறது
கொடை

இருப்பவர் பொருளையும்
இல்லாதோர் இன்சொல்லையும்
இணக்கத்துடன் ஈதலே
கொடைதான்

நடைப்பாதையில்
நறுக்கென தைக்கும் முள்ளை
நளினமாய் நகர்த்துவதும்
கொடையென்றார்கள்
நபிகள் நாயகம்

அறியாதவருக்கு
அரிவரி கற்பிப்பதும்
குணம் சிதராமல்
குடும்பத்தாருடன் கூடிமகிழ்வதும்
கூழைமைத் தவறாமல்
நடப்பதும்
மனம் நோகாமல்
மனிதர்களிடம் மணப்பதும்
விவேகியாய்
விட்டுக் கொடுப்பதும்
நாம்
மனிதனாய் சமைந்ததற்கு
நம் வாழ்க்கையில்
கொடுக்க வேண்டிய
கொடை...!

திங்கள், ஆகஸ்ட் 10, 2009

தற்கொலைகள்


மரணத்தைக் கண்டு
அஞ்சினாலும்
கெஞ்சினாலும்
மரணம்
கட்டித்தலுவாமல்
கடப்பதில்லை
எந்தநேரத்திலும்
மரணிக்கப்போகும்
நமக்கு
அது எப்போது என்பது
மட்டும்
திரையிடப்பட்டிருக்கிறது
திறந்திருந்தால்
மரணபீதியில்
ரணமாகும்
மனிதவாழ்க்கைகள்...

இயல்பாய்
தழுவவேண்டிய மரணத்தை
சிலர்
இனம் மனம்
மதம் நிறம்
மொழி மோப்பு
பொருள் வறுமை
இவைகளுக்காக
பொறுமையிழந்து
இன்னுயிரை
இழப்பதற்கு இசையும்
தற்கொலைப் பிரியர்கள்...

தன்னைக் கேட்காமல்
தான் பிறந்தபோது
தன்னைத் தான்
கொலைச் செய்துக் கொள்வது
எப்படிப் பொருந்தும்...?

உயிரைவிட்டு விடுவதால்
உறவாய் வந்த பிரச்சனைகள்
உதிர்ந்துவிடுமா...?
உலர்ந்துதான் விடுமா...?

உயிரைக்கொண்டு
பிரச்சனையைப் பார்ப்பதைவிட
அறிவைக்கொண்டு
பார்வையிட்டால்
அறவழி பிறக்கும்
அஞ்ஞானம் விழக்கும்...

எந்த எண்ணத்தில்
இறக்கின்றோமோ
அதே எண்ணத்தில்
எழுப்பப் படுவோம்
என்கிறது இஸ்லாம்...

உடலைமாய்த்துக் கொள்வதால்
ஆன்மா அமைதியடைவதில்லை
உடலை வைத்துதான்
உண்மையை விளங்கமுடியும்
தன்னையும் அறியமுடியும்...

தன்னைமாய்த்துக் கொண்டு
சார்ந்தவர்களுக்கு
சந்தாபம் தந்துவிட்டு
கோழையாய் பாடையில்
போவதைவிட
உடையவர்களுக்கு
உறுதுணையாய்
உணவாய் உணர்வாய்
உணர்ச்சியாய் உரிமையாய்
உயிர்தந்து வாழ்வதற்கு
உங்களை
தற்கொலை செய்துக்கொள்ளுங்கள

வியாழன், ஆகஸ்ட் 06, 2009

நான்...?


நான் சாதித்தவன்
நான் பாதித்தவன்
நான் திறமையானவன்
நான் உண்மையானவன்

நான் செய்தேன்
நான் கொடுத்தேன்
நான் வளர்த்தேன்
நான் எடுத்தேன்

இப்படி
நான் நான் என்று
வார்த்தைக்கு வார்த்தை
வரப்புக் கட்டுகின்றோமே
அந்த நான் யார்...?

அன்னைக்கு நான் மகன்
ஆசிரியருக்கு நான் மாணவன்
மனைவிக்கு நான் கணவன்
குழந்தைக்கு நான் தகப்பன்
உறவுக்கு தக்கவாறு
நாமம் மாறலாம்
நான் மாறுவதில்லை...

நான் என்பது யார்...?

நான் - நான்தான் என்போம்
நான் என்பது உடலல்ல
நான் என்பது உயிருமல்ல...

உடலுக்கும் உயிருக்கும்
உறவாய் இருப்பது ஆன்மா
உள்ளத்தில் உறைந்திருப்பது
அந்தராத்துமா...

பொருளறையிலிருந்து
புறப்பட்டு
கருவறையில் நுழைந்தோம்

தாம் யாரென்ற சிந்தனை
நம்மில் எழுந்தாலே
நாம் பாதி ஞானி
அதை விளங்கினாலே
பதிஞானி...

நான் என்பது பிரபஞ்சம்
ஐம்பூதங்களும்
அதில் தஞ்சம்
இதில் பெறவேண்டும் விஞ்ஞம்

ஜடத்தை வைத்து
நானை மட்டுப்படுத்துவதால்
மனிதம் மரணிக்கிறது
அநீதம் பிறக்கிறது...

நானை விளங்கி
நாம் வாழ்ந்தால்
நான் உனக்கு சகோதரன்
நீ எனக்கு சகோதரன்...!

புதன், ஆகஸ்ட் 05, 2009

உறவுகள்


இல்லாமையிலிருந்து
உருவானது
இருப்பின் உறவு...

இருப்பிலிருந்து
உதயமானது
படைப்பின் உறவு...

படைப்பில்
பயணமானது
உயிரினங்களின் உறவு...

உயிரினங்களில்
உதயமானது
தாய்மையின் உறவு...

தாய்மையில் தகுதியானது
கல்வியின் உறவு...

கல்வியில்
கரைச் சேர்ப்பது
குருவின் உறவு...

குருவைக் காண்பது
தேடலின் உறவு...

தேடலில் கிடைப்பது
தெளிவின் உறவு...

தெளிவில் தெரிவது
அறிவின் உறவு...

அறிவு உணர்த்துவது
சாந்தியின் உறவு...

சாந்தி சந்தித்தது
சமாதான உறவு...

சமாதானம்
சங்கமித்தது
ஆன்மாவின் உறவு...

ஆன்மா அமைந்தது
இறையின் உறவு...

இறை நிறைந்தது
இருப்பிலும்
இல்லாமையிலும் உறவு...!

சனி, ஆகஸ்ட் 01, 2009

உடன் பிறப்பு


தாயின் கருவரையில்
சேய்மையாய் பிறந்த உறவு...

உதிரம் ஒன்றானாலும்
வாழ்க்கையில்
உதிரக்கூடாத உறவு
சகோதரன் சகோதரி...

ஒன்றாய்ப் பிறந்து
ஒன்றாய் வளர்ந்து
ஒன்றாய் வாழ்வதில்
சிலர்
ஒற்றுமை இழப்பதேன்...?

கருத்துக் கலப்பில்
கரையேராமல்
குருத்துவம் இழக்கும்
இவர்களின்
குருதி உறவுகள்...

அவசர வாழ்க்கைக்கு
ஆசைகள் அதிகம்
அதனால்
அனைத்து தேவைகளுக்கும்
ஆசிரியராவது சுயநலம்...

விட்டுக்கொடுப்பதற்கு
பொருள் இருந்தாலும்
உறவை வெட்டுவதற்கு
பலர்
பொருளாகிறார்கள்...
நீயா...? நானா..?
சுயநலக் களத்தில்
சூனியனர்களாகும்
ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள்...

கூடப்பிறந்தவர்களோடு
கூட்டாக வாழாதபோது
கூட்டர்களுடன் கூடுவதில்
குணம் சிறக்குமா...?

பக்கத்து வீட்டுக்காரனை
மன்னித்துவிடும் மனம்
பாசக்காரனுக்கு
அது கொடுப்பது
மரணத் தண்டனை...

பாசமும் அன்பும்
மதிப்புத் தெரியாதவர்களின்
மத்தியில்
மரணமாகிக் கொண்டிருக்கிறது...

இது
தாய்ப்பாலின் கலப்படமா
தாரம் தந்த பாடமா...?

யார் வகுப்பு நடத்தினாலும்
அங்கு பாசம் குருவானால்
வேசக்குரு கலைந்துவிடும்...

உறவோடு உறைந்தவர்கள்
பலரின்
உள்ளங்களில் வாழ்கிறார்கள்
உறவைத் துறந்தவர்கள்
தங்களின்
உள்ளத்தை தொலைக்கிறார்கள்...

தான் என்றத் தலைக்கணம்
தரையிரங்கினால்
நாம் என்ற ஒற்றுமை
தலைசிறக்கும்...!