ஞாயிறு, அக்டோபர் 26, 2008

தீபாவளி நல் வாழ்த்துக்கள்...


என் இனிய நண்பர்களுக்கும்

வலைப்பூக்குள் வலம் வரும்

தமிழ் நெஞ்சங்களுக்கும்

தீபாவளி நல் வாழ்த்துக்கள்...

-இஸ்மத்

சனி, அக்டோபர் 25, 2008

மத நல்லிணக்கம்.....


மத நல்லிணக்கம்

மனுஷனாக
வாழ்வதற்கே சமயங்கள்

மனிதனின்
விருப்பத்திற்கும்
அறிவுக்கும் தக்கவாறு
கொள்கைகளில் நேசங்கள்

நேசக்கரங்களில்
நேர்த்தியாய் செய்யப்பட்ட
அரிவாள் எதற்க்கு…?
அறுக்கப்படுவது பயிர்களா
மனித உயிர்களா…!

அறிவாள் தீர்கப்படவேண்டிய
பிரச்சனைகளை
அரிவாளால்
தீர்த்துக்கட்டப்படுதேன்…!

கருவறையின்
இரகசியத்தை
நம் காதுகள் கேட்பது
எப்போது…?

மழைப் பொழிந்து
அணையில் தேங்கி
நதிகளில் கலந்து
ஆறுகளில் பாய்ந்து
சங்கமிக்கின்றன சமுத்திரத்தில்

அதில்
அணை எங்கே
ஆறு எங்கே
நதி எங்கே…?

இவைகள்
நீரை சமுத்திரத்தில்
சேர்க்கும் வழிகள்

எந்த அணையிலிருந்து
வந்தோம்
எந்த நதியில் இணைந்தோம்
எந்த ஆற்றில் பிரிந்தோம்
என்பதெல்லாம்
சமுத்திரத்தில் கலந்த
நீருக்கு தெரியுமா…?

மமதையர்களின் ஆசைக்கு
மனிதர்கள் பலிஆடா…?

கோவிலும்
பள்ளிவாசலும்
மாதாகோவிலும்
புனிதமாக வழிபாடு செய்யும் போது
ஆறுமுகமும்
அப்துல்லாஹ்வும்
ஆல்பர்ட்டும்
மனிதத்தை மறந்தவர்களா…?

ஆறுமுகம் அறுவடைசெய்வது
அப்துல்லாஹ்வின் வயல்
ஆல்பர்ட் நிறுவனத்தில்
அப்துல்லாஹ் மேலாளர்
மதங்களை மறந்த
இவர்களுக்குள் வளர்வது
மதநல்லிணக்கமல்ல
மனிதநல்லினம்

தூய்மையான
இவர்களுக்கு மத்தியில்
துவைதத்தை தூவியது
யார்…?

அரசியல் என்ற
வியாபாரச் சந்தையில்
மதங்களும் மார்க்கங்களும்
விற்;பனைப் பொருள்கள்
சந்தை பரபரக்க விந்தைசெய்து
பரபக்கத்தை (பிறர்மதத்தை)
சூடுபடுத்தி குளிர்காயும்
சூத்திரக்காரர்கள்
அரசியல்வாதிகள்

பிள்ளையைக் கிள்ளிவிட்டு
தொட்டிலை ஆட்டுவதுப் போல்
கட்டும் மேம்பாலங்களிலும்
கடக்கும் சாலைகளிலும்
நடக்கும் பாதைகளிலும்
மதநல்லிணக்கம் என்றபெயரில்
பெயர்தாங்கி நிற்க்கின்றார்கள்
மறைந்த பல சமுதாய மனிதர்கள்

சாலைகளில் மதநல்லிணக்கத்தை
காண்பதை விட்டு
அரசியலில்
மதமற்ற மனிதர்களை
தேடுவோம்….

மனிதநேய உணர்வில்
அரசியல் வாழ்ந்தால்
ஆறுமுகத்தின் மகள்
அப்துல்லாஹ்வின்
மருமகள்
ஆல்பர்ட்டின் மகன்
ஆறுமுகத்திற்கு
மருமகன்…!

புதன், செப்டம்பர் 24, 2008

33.மரணம்…

மரணம்…

மரணம்
இது ஜீவராசிகளுக்கு
இறைவன் விரும்பிய
கரணம்…

மரணம் இல்லாத
வாழ்க்கையில்
சுவை இல்லை
வளம் இல்லை…

மரணம் அனைவருக்கும்
சமம்
அதை மறப்பதால்
மரணச்செய்தி
கேட்டதும் மனம் ஆவது
ரனம்…

மனிதர்களுக்கு
மன்னிப்பையும்
மறத்தலையும்
அருளுவது
மரணம்…

மரணம் என்பது
அச்சமல்ல
அது ஒரு மாற்றம்
உரு மாற்றம்
எந்த பொருளுக்கும்
அழிவில்லை
எல்லாம் உருமாறுகிறது
எதில் துவங்கியதோ
அதில் நிறையும்
விரளம்…

மரணம் உடலுக்கு
அதை சுவைப்பது ஆன்மா
மண்ணோடு மண்ணாகிப்போவது
மகான்கள் அல்ல
மனிதர்கள்…

மரணிப்பவரெல்லாம்
மரணமாவதில்லை
சிலர்
வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள்
தத்துவங்களாய்…

உடலுக்கு ஆடை உடுத்தி
ஜாடைப்பார்த்து
நிஜங்களை மறைக்க
நிறங்கள் பூசி
பல வர்ணங்களில்
அழகு பார்த்த ஆக்கை…

மரணம் என்ற நிகழ்வில்
உயிர் களையும்போது
நான் என்பதை
உடலாய் பார்த்த உள்ளம் படும்
வேதனைகள்…

ஆன்மாவின் பிரிவு
நான் என்ற எண்ணத்தில்
அவதிகள்…

நாம் மரணமாகும் முன்
நம்மில் மரணமாவோம்…

32.தர்மம்…

தர்மம்…

தர்மம் தலைக்காக்கும்
தவமாய்சொன்ன வார்த்தை…

தலைக்காக்க வேண்டி
தர்மம் செய்தேன்
கலைகாக்கவும்
தர்மம் செய்தேன்
ஏழைபசி போக்கவும்
தர்மம் செய்தேன்
எனக்குள் நிறைவு
நான் தர்மஸ்தன் என்று…

தர்மம்சொன்னது
நீ அதர்மஸ்தன்
நீசெய்த தர்மம் உன்னிடமே
தர்மம்செய்த எண்ணத்தையும்
தர்மம்செய்யாத வரையில்…!

31.வணக்கம்…

வணக்கம்…


வணக்கம்
இது இறைவனுக்கு
சொந்தமானது...

தன்னை வணங்கும்படி
இறைவன்
மனிதனுக்கு சொல்கிறான்…

வணக்கம் என்ற
வார்தையினால்
இறைவனை
வணங்க முடியாது…

வணக்கம் என்பது
செயல்பாடு
மனமும் சிந்தனையும்
ஒர் நிலை
பெறவேண்டும்-இது
ஆன்மாவிற்கும்
ஆண்டவனுக்கும்
உள்ள தொடர்பு…

மனிதனுக்கு வணக்கம்
சொல்வது-அது
இறைவனை
வணங்குவது போலன்று…

வணக்கம் சொல்வது
கீழைத் தேயத்துப் பழக்கம்
அது
தமிழர் வழக்கம்…

மனிதனுக்கு மனிதன்
வணக்கம் என்ற
வார்தையினால்
வெளிபடுத்துவது
நேசம்
மனிதனை
நேசிக்க தெரியாதவன்
இறைவனை
நேசிக்க முடியாது…

இறையின்
உயர் வெளிப்பாடு
மனிதனாக இருக்கிறான்-
அதனாலே
இறை
தனது பிரதிநிதி
மனிதன் என்கிறான்…

மனிதன்
மரணத்தை சுவைப்பவன்
மரணமாகியும்
சில மனிதர்கள்
இன்றும் வாழ்கிறார்கள்
இவர்கள்
மனிதர்களை நேசித்தவர்கள்
நேசமே
வணக்கம்…

30.எனக்கு நானே கண்ணாடி

எனக்கு நானே கண்ணாடி…

ஞானமறிய
ஞானியைத்
தேடி நின்றேன்…

ஞானம் பயில்வது
ஞானியவதற்கல்ல
மனிதனாக வாழ்வதற்கு…

குருவிற்கு முன்
குனிந்து பணிந்து விடலாம்
ஆனால்
மனிதனுக்கு முன் மனிதனாக
நடந்துக் கொள்வதில்
ஞானம்
மனிதனைப்
புனிதனாக்குகிறது…

எந்த பதவி
முக்தியைத் தருமோ
அந்த பதவி
மனித வாழ்க்கைக்கு
சித்தி தரும்…

ஞானம் கற்பது
நாட்டையும் ஆள்வதற்கு;
வாய்ப்பு கிடைத்தால்
ஆண்டு விடலாம்
ஆனால்
நோக்கம் அதுவல்ல…

குரு தந்த அறிவை
அறியாத போது
அதை
அடுத்தவர்களுக்கு
அள்ளித்தர
நாம் என்ன
வள்ளலா…?

மகத்துவை மனதில்
நிலை நிறுத்து முன்
நீதியாய் நிலத்தினில்
நடந்திடல்
வேண்டும்…

இறை ஞானத்தை
விளங்கி வந்தால்
ஒளி விளக்காகி
விடலாம்
விளங்குவதாய்
எண்ணம்
விளக்கம் எண்ணமல்ல…

துன்பமும் துயரமும்
மழையாய்
பொழியும் வேளை
அதில்
நனைகின்றவர்களுக்கு
குடையாய் நிற்பதே
சகோதரத்துவம்…

இது
ஞானம் கற்கும்
பணிமனை
மனிதனை மனிதனாக்கும்
ஆத்ம மருத்துவ மனை
இங்கு
எனக்கு நானே
கண்ணாடி…!

29.ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை…

ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை…

மதங்களை மறந்து
மனிதர்களை
நேசிக்க கற்றுத்தரும்
மகத்துவமிக்க
அவை இது …

கல்லூரிக்கு சென்றாலும்
கிடைத்திடாத
ஏக இறையறிவை
கனிவாய் போதிக்கும்
சபை இது …

முட்களாய்
வீதியில் வளர்ந்த சிலர்
ரோஜா மொட்டுகளாய்
மலர்கிறார்கள் …

கற்களாய் கரைகளில்
கிடந்த சிலர்
இங்கு வைரங்களாய்
ஜொலிக்கிறார்கள்…

ஆம்
இவர்கள்
மனித நேயத்தை
சுவாசிப்பவர்கள்
இங்கு
சுடலைமணி நாடாரும்
சுல்தான் அப்துல் காதிரும்
ஒன்று தான்…

இவர்கள்
மதங்களைக் காரணங்காட்டி
தங்களுக்குள்
பேதச் சுவரை
எழுப்புவதில்லை.
அதை
இடித்துக் கொண்டிருக்கிறார்கள்…
ஆம்
இவர்கள்
மதமற்ற மதமாகிய
மெய்ஞானத்தை
சுவைப்பவர்கள்…

இவர்கள்
ஞானம் கற்பது
ஞானி ஆவதற்கல்ல
மனிதனாக வாழ்வதற்கு…

தனையறியும்
உயர் மெய்ஞானத்தை
பயிர் செய்தால்
அயோத்தியில்
மட்டுமல்ல
அகிலமனைத்திலும்
அமைதி விளையும் …

28.திருக்குர்ஆன்


திருக் குர்ஆன்…

திருக்குர்ஆன்
இது
இறைவனின்
முழுமையான உரையாடல்…

வஹி எனும்
வேத வெளிப்பாடு
‘ஹிரா’ மலையின்
உச்சத்தில்…

அண்ணல் நபிகளுக்கும்
‘ஹிரா’ மலைக்கும்
ஆழமான உறவு…

ஆயிரம் ஆண்டுகளைக்
கடந்து இன்றும்
அண்ணல் நபிகளின்
அசலை அடையாளம் காட்டும்
அகல்…

வேதம்
அகமும் புறமும்
கொண்ட தேகம்
இது ஆத்ம தாகம்
கொண்டவர்களுக்கு
தருவது ‘தீன்’ எனும்
பானம்…

வாழ்க்கை
பயணத்திற்கு -இது
விபத்தில்லாத
வாகனம்…

தேகத்தில் மட்டுப்பட்டு
தேட்டம் கொண்டவர்களுக்கு
ஏகத்திரையை
அகற்றி
அமரச் செய்யும்
ஆசனம்…


நுண்ணறிவோடு
இதில் நுழைபவர்களுக்கு
‘ நூர்’ எனும்
நுண்மையின்
நிர்வாணம்…

அறிவெனும்
ஆயுதத்தால்
ஆழத்தோண்டுபவர்களுக்கு
புதையலாய் கிடைப்பது
பூரணம்…

மனிதர்களையும்
மனிதருள்
புனிதர்களையும்
புவியிர்கு
புகட்டும் புலன்;…

மன நோயுடன்
நடை பிணமானவர்களுக்கும்
உடல் நோயால்
அவதிபடுபவர்களுக்கும்
அருள்புரியும்
மருந்தகம்…

விஞ்ஞானிகளையும்
மெய்ஞ்ஞானிகளையும்
உருவாக்கும்
தொழிற்சாலை…

அறிவு
படித்தரங்களுக் கேற்ப
அறியத்தரும்
பாடசாலை…

நீதியையும்
நிஜங்களையும்
நிறம் காட்டும்
கண்ணாடி…

சரித்திரங்ளையும்
சமுகத்தினரையும்
அவர்கள் செய்த
விசித்திரங்களையும்
விகற்பிக்கும் விளக்கு…

இறந்தவர்களுக்கும்
இறையோடு
கலந்தவர்களுக்கும்
நிறைவோடு
மறை ஒதும் போது
நிறைத்திடும்
ஆத்ம சாந்தி…

புனிதமும்இபுண்ணியமும்
பூரணமான
வேதத்திற்கு முன்;
வேடம் போடுபவர்களையும்
வேய்வு செய்பவர்களையும்
இது
வழி கெடுக்கும்
வல்லாண்மை…

பாமரர்களுக்கு
இது அளிக்கும் பரிமாணம்
துவைதம்…
பதிஞானம் கொண்டவர்களுக்கு
இது வழங்குவது
அத்வைதம்…!

27.மனிதனாய் மலர்வோம்

மனிதனாய் மலர்வோம்…


அண்ணல் பெருமானே
நீங்கள்
சொன்ன சொல்தானே
உலகில் நிஜமானது
அழகில் அழகானது
அதுவே
அறிவில் உயர்வானது…

மாநபி
வருகையினால்
மனிதன்
மனிதனானான்
மன்னரின்
வார்த்தையினால்
மனிதன்
உயர்வானான்
மறையை தந்ததனால்
மனிதன்
நிலையானான்
தன்னை அறிவதனால்
மனிதன்
நிறையாவான் …

அண்ணல் நபிகளை ஆய்தால்
அகத்தினை
அங்கே காண்போம்
ஏகத்தில்
நாமும் கலந்தால்
எண்ணத்தில்
ஏகனை நினைவோம்
தன்னிடம்
தானே மாய்ந்தால்
தண்னிலே
நிதம் மலர்வோம்
உள்ளத்தில்
ஞானம் தெளிந்தால்
இல்லத்தில்
அஞ்ஞானம் கடப்போம் …

இருப்பதெல்லாம்
ஒன்றே
மறுப்பதில் இல்லை
நன்றே
அகத்திலிருப்பது விதையே
அதை
விதைத்துப் பார்த்தால்
இறையே
இதை
அறிய நாடுவோம் குருவை
அந்த
குருவில் காணுவோம்
நிறைவை
மருவை நீக்கிடும் நம்மில்
மனிதனாக்கிடும்
மண்ணில்…!

26.புகழை புகழ்பாடுவோம்

புகழை புகழ் பாடுவோம்…


மது மாது மதி மயக்கம்
மிருகத்தையும் விட
கேடு கெட்ட நிலையில் வாழ்ந்தவர்களை
மனிதனாக வாழவைத்த
மனிதருள் மாணிக்கம்
நபிகள் நாயகம்…
அல்லவா...

இன்னல்கள்
வாழ்க்கையில் பின்னல்கள்
எதிர்நோக்கும் போதெல்லாம்
இறைவா இறைவா என்று
இறைஞ்சல்கள்
அந்த இறையை காட்டி தந்த
உத்தமர்
நபிகள் நாயகம்…
அல்லவா...

அமைதி இழப்பு
அவதிப்படும் உள்ளம்
மனம் ஆறுதல் தேட
‘அல்லாஹ்’வை நினைவு கூற
ஐங்காலத் தொழுகை
வாடிய மனதை மலரச்செய்த
வள்ளல் பெருமான்
நபிகள் நாயகம்…
அல்லவா...

எப்படியும் வாழலாம் என்பது
வாழ்க்கையன்று
இப்படித்தான் வாழ்க்கை என்று
சீறும் செம்மையும்
செப்பனிட்ட தளமாய்
அதுவே ‘ஷரிஅத’; என்ற களமாய்
அமைத்து தந்த பெருந்தகை
நபிகள் நாயகம்…
அல்லவா...

அகிலத்தின் ஆரம்பம்
அதன் முடிவு
‘வஹி’ என்னும்
வேத வெளிப்பாட்டில் முழுமை
அதை
உள்ளத்தில் உறையச்செய்யும்
திருக்குர்ஆன்
அதை பயின்றவர்கள்
‘ஹாபிஸ் ஆலீம்’களாய்
அகிலத்திற்கு அடையாளம் தந்த
அருளானவர்கள்
நபிகள் நாயகம்…
அல்லவா...

பெயருக்கு முன்னால்
‘ஹாஜி’ என்ற பட்டம்
இதை நாம் சுமப்பதற்கு
கல்லடியும் சொல்லடியும்
தன் தேகத்தில் கண்ட
கருணைக்கடல்
நபிகள் நாயகம்…
அல்லவா...

‘சூர்’ ஊதி அகிலங்கள் அழிக்கப்பட்டு
ஜீவராசிகள் மடிந்து
இறைவணக்கம் அற்றுப்போகும்
அந்நாளில்
இறைவன் அவனது மலக்குகள்
‘ஸலவாத்’ என்னும்
நபிகள் நாயகத்தின்
திரு புகழை
அணையாத அகலாய்
அட்சயபாத்திரமாய் பாடும்
மாட்சிமை மிக்க
நபிகள் நாயகம்
நமக்கு சாதாரண மனிதரா…?

அகிலப் படைப்பே
அண்ணல் பெருமானாரின்
அவதாரம்.
‘அல்லாஹ்’ அறியத்தரும் அண்ணலை
புகழ்வது
இணைவைத்தலா…?

படைத்தவன் புகழும் போது
படைக்கப்பட்ட நம்மிடம்
ஏன் இந்த பாரபட்சம்…?

பஞ்சு மெத்தையில்
பட்டு விரிப்பினில்
கட்டியணைத்த நம் மனையாளை
மானே தேன்னே மயிலே குயிலே
சந்திரனே சூரியனே
வண்ணமலரே வாடாமல்லிகையே
இப்படி
அற்ப சுகத்திற்கு
நாம் அள்ளிவிடும் வார்த்தைகள்
இறைக்கு
இணைவைத்தல் இல்லையா…?

அரசியல் தலைவர்கள்
அலுவலக மேலாளர்கள்
பதவிக்காக பொருளுக்காக
பரவசத்தோடு புகழ்வதும்
பெயருக்காக புகழுக்காக
நம்மை சார்ந்தவர்கள்
நமக்கு சம்பந்தபட்டவர்கள்
வார்த்தைக்குள் வராத வார்த்தைகளால்
புகழ்மாலை சூட்டுவதும்
இணைவைத்தல் இல்லையா…?

நமது பெற்றோரும்
நமக்கு கற்பித்தவரும்
சாதாரண மனிதரா
மெய்ஞ்ஞானியும்
விஞ்ஞானியும்
சாதாரண மனிதரா
நாட்டின் பிரதமரும்
மருத்துவரும்
சாதாரண மனிதரா…?

அறிவு படித்தரத்தில் நம்மிடம்
ஆழமான வித்தியாசங்கள்
நம்மை நாம் அறியாத நிலையில்

அகிலத்தின் அருட்கொடை
சத்திய சீலர்
சாந்த நபிகளை
நம்மோடு சரிசமம்
என்பது சரிதானா…?

அறிவின் தந்தை என்று தன்னை
ஆரத்தி எடுத்தவன் ‘அபுஜஹில்’
அவன் முட்டாள்களின் தந்தையான
சரித்திரம் நம் கையில்…

வரிந்து கட்டியவரெல்லாம்
வழுக்கி விழுந்து
மண்ணைக் கவ்விய வரலாறுகள்
நம் வாசிப்பில்…
அதனால்
அண்ணல் நபிகள் சாதரண மனிதரும் அல்ல
அவர்களை புகழ்வது
இணைவைத்தலும் அல்ல…

சாதாரணமும் இணைவைத்தலும்
சத்தியம் விளங்காதவர்களுக்கே…
அதனால்
தூசிகள்;என்றுமே சூரியனை
மறைக்க முடியாது…!

25.தொப்பி

தொப்பி …

தொப்பி போட்ட
இஸ்லாமியர்
பள்ளிவாசலுக்கு
தொழச் சென்றார்…

பின் வரிசையில்
சிறுவர்கள்
தலையில் தொப்பி யோடு …

முன் வரிசைக்கும்
பின் வரிசைக்கும்
இடையில்
வெறும் தலையுடன்
இளைஞர்கள்…

அமைதியான
தொழுகைக்கிடையில்
ஹனபிபள்ளியில்
ஆமீன் - என்ற
ஆவேசக் குரல்கள்…

சலனமற்ற இறை
சந்திப்பில்
சிலரால்
சிதறும் சிந்தனைகள்…

நிலை நாட்டப்பட
வேண்டிய தொழுகை
நிலை குலைகிறது…

தொப்பி போடுவது
பர்ளா ? சுன்னத்தா ?

சிலரது ஆத்திரக்
கணைகள்…

இஸ்லாம்
அறிவுப்பூர்வமான
மார்க்கம்-என்று
மேடையில்
பேசினால் மட்டும்
போதாது…

தலைமுடி உதிர்வை
தடுக்கும் கவசம்
தொப்பி…

அதை அணிவதால்
விளைவது
பள்ளித் தூய்மை…

இதை
ஏன் இவர்கள்
மறுக்கிறார்கள்
அல்லது
மறைக்கிறார்கள்…!

24.வரலாறு

வரலாறு…

நிகழ்வுகளின்
உதயமே
சரித்திரங்கள்…

உதிர்ந்து போன
இலைகளுக்கும்
உதிரம் சிந்திய
உத்தமர்களுக்கும்
உளமையான
சரிதைகள்…

வாசிக்கப்படும்
வரலாறுகள்
சிலரது
வஞ்சனைக்குள்…

கற்பனைகளுக்கும்
காட்சிகளுக்கும்
இடையில்
கட்டுக்கதைகள்
இது
தொலைகாட்சிகளில்
தொலைத்து விட்ட
நேரங்களில்…

மார்க்கம் இன்று
தர்க்கங்களுக்கும்
தடுத்தாளுதல்களுக்கும்
மத்தியில்…
சிலரால்
அமைக்கப்பட்டிருப்பது
தளங்கள்…

சஹாபாக்களும்
இமாம்களும்
பிழிந்து தந்த
சாராம்சத்தினை
மீண்டும்
பழத்திற்குள் செலுத்தும்
முயற்ச்சிகள்…

‘ மதஹப்புகள்’
அவசியமா ?
குறுக்கு
விசாரணைகளோடு
குருடர்கள்…

நான்கு
மதஹப்புகளுக் கிடையில்
அஞ்சாவது
நாத்திகம் போல்…

தீண்டாமைகள்
இன்னும்
வாழ்ந்துக்
கொண்டிருக்கிறது
‘லயீப்’ என்னும்
பல ஹதீஸ்கள்
தீண்டாமைகளோடு…
அவ்லியாகடகளும்

அன்பியாக்களும்
அச்சமும்இதுக்கமும்
படுமளவு
அஞ்ஞானிகள்…

சத்தியங்கள்
இப்போது
சில்லரை கடைகளில்
மலிவான
விற்பனையில்…

ஒற்றுமை என்னும்
கயிற்றை
விட்டு விட்டு…

வேற்றுமையின்
வேர்களை
ஆழத்தோண்டி
புதைக்கப்படும்
பரிதாபங்கள்…

இவர்களுக்கு
இடையில்
மாற்றான்
தோட்டத்து மல்லிகைகளில்
சிலர்…

இஸ்லாம்
வாளால்; புறப்பட்டது
என்று
முடிசூடும்
முன்னுரைகள்…

வாளால் புறப்படுவது
மார்க்கமல்ல
வாளால் தற்காத்துக்
கொண்டதே
மெய்யுரைகள்…

இவைகள்
அனைத்தும்
ஆரோக்கிய
வளர்ச்சிகளுக்கு
அப்பால்…!

23.தர்ஹாவாசிகள்

தர்ஹா வாசிகள்

மதங்களைக் கடந்து
மனிதர்கள்
சங்கமிக்கும் இடம்
தர்ஹா…

வேண்டுதல்
வேறுபட்டாலும்
நம்பிக்கை
மாறுபடுவதில்லை…

ஏழை பணக்காரன்
என்ற
ஏணிப்படிகள்
இல்லாத இடம்…

நம்பி வருபவர்கள்
பலர் நலத்துடன்
கரையேறுவது
வெறும்
கனவு கதையல்ல…

மஹான்கள்
மனிதர்கள் தான்;
ஆனால்
உள்ளுறை உணர்ந்து
உள்ளத்திலும்இஎண்ணத்திலும்
சிந்தனையிலும்இ
செயலிலும்
இறையுடன் நிறைவோடு
நித்தியவான்களாய்
நிறைந்தவர்கள்…
இவர்கள்
அச்சமில்லாதவர்கள்
துக்கமில்லாதவர்கள்
என்பது
தூயவன்
தூவும் தூறல்…

இறைவனிடம்
கேட்க வேண்டியதை
மஹான்களிடம்
கேட்பதா…?

இது
புரியாத
புதியவர்களின்
பூஜிய புறப்பாடு…

எங்கும் நிறைந்த இறை
இங்கும் நிறைவதே உளம்.

இது
இறைவனுக்கு
இணை வைத்த லென்று
தங்கள்
தழிழ் நாட்டு தலைவர்கள்
சொன்னதை
துணை வைத்து
வாதாடல்கள்…

வேதத்தை காண்பித்து
இவர்கள் செய்வது
வேய்வுகள்…

அண்ணல் நபிகளை
ஆழமாக ஆய்ந்தால்
இறைவனையும்
இணை வைத்தலையும்
இலகுவாக காண முடியும்
இனம்…

பாரபட்சமில்லா
ஆய்வினால்
மட்டுமே
பரம் பொருளை
விளங்க முடியும்…!

22.அறிவைத்தேட குருவை நாடு

அறிவைத் தேட குருவை நாடு…


குரு அவசியமா?

குழப்புகிறது ஒரு கூட்டம்
குறுகிய நோக்கத்தில்
குர்ஆனை படித்து விட்டு
குறுக்கு வழியில் வந்த
குதர்க்கவான்கள்
இவர்கள்…

ஹதீஸை
அலசி விட்டோம்
அதனால்
அண்ணல் பெருமானார்
எங்களுக்கு
அண்ணன் என்று
சொல்லும் இவர்கள்…

சரித்திர நாயகர்கள்
இவர்களுக்கு
சாதாரண மனிதர்கள்…

சத்திய மறியாத
சாதாரண மனிதனுக்கு
சரித்திர நாயகர்களும்
சர்வமும் இவர்களுக்கு
சாதாரணம் தான்…

குரு என்பது
மனித வழிபாடல்ல
மனிதனை மனிதனாக
வாழவைக்கும்
வழிக்காட்டல்…

அறிவை
அறிவைக் கொண்டு
அறிய வேண்டுமென்ற
தத்துவத்தை-நாம்
அறிந்திருக்கிறோமா.?


சம்பூரண மார்க்கத்தை
பூரணமாகப்பார்ப்போம்
இமையை மூடினால்
இம்மை இல்லை என்ற
பூனைக் கதையை
பூரணத்தில் புகுத்தலாமா?

உலகத்தை
உரசியிருக்கலாம்
ஆகாயத்தை
அலசியிருக்கலாம்
ஆனால்
நம்மை நாம் அறியாத போது
நம் உள்ளம் இருள்…

பிறப்பிலிருந்து
இறப்பு வரையில்
குருவின்
தொடர்பு…

பிறப்பதற்கும்
வளர்ப்பதற்கும்
பெற்றோர்கள்
குரு…

பள்ளிச் சென்று
பயிலும் போது
ஆசான்
குரு…

பள்ளி வாசல் சென்று
பலருடன் தொழும் போது
இமாம் குரு…

நம்மை
இயக்குவதற்கும்-நாம்
இயங்குவதற்கும்
இருக்கிறது
குருவின் இலக்கு…

அரிச்சுவடி
அறிந்து விட்டதினால்
கல்லூரிக்கு
ஆசான்
தேவையில்லை யென்று
கூற முடியுமா நம்மால் ?

அது முடியாத போது

அல்லாஹ்வின்
வேதத்தை
ஆசானின்றி அறிய
நினைப்பது
அல்லாஹ்வை அறிய
ஆசான்
தேவை யில்லை-என்று
கூறுவது
ஆதாரமாவது எப்படி.?

பிறக்கும் போது
சம்பூரணத்தையறிந்து
பிறந்து விட்டோமா.?

ஆகாயத்தை நோக்கி
உமிழும் உமிழ் நீர்
நம் முகத்திலேயே
உதிர்ந்துக் கொண்டிருக்கிறது
உணர்வோம்…

அனைத்திலும்
அனைத்துமாயிருக்கிறான்
அல்லாஹ்…

ஆகாயத்தை மட்டும்
பார்த்துக் கொண்டிருப்பதால்
ஆதாரமாகி விடாது…

ஆதாரத்திற்கு
ஆதாரம் தேடுவதை விட்டு
ஆணவத்தை
அறுத்தெறிந்து
அறிவைத்தேடுவோம்
அறிவைத் தேட
சற் குருவை நாடுவோம்…!

21.இறையறிவே இறுதியறிவு

இறை அறிவே இறுதி அறிவு …!


இறைவா
நீ எங்கே இருக்கிறாய்
எப்படி இருக்கிறாய்
எது வாக இருக்கிறாய்
உன் இருப்பிலே எனக்கு
குழப்பம்…

ஏழு வானங்களுக்கு மேல்
அர்ஷிலே
ஆட்சியமைத்திருப்பதாய்
கூறுகிறாய்…

‘உன் பிடரியின்
நரம்பிற்கும் மிக சமீபமாய்
இருக்கிறேன்
கூப்பிட்ட குரலுக்கு
பதிலளிக்கிறேன்’
என்று
உன் வேதத்தில்
வாதம் செய்கிறாய்…

எத்தனையோ
கஷ்டங்களில்
நஷ்டங்களில்
அழுகின்றேன்
உன்னை அழைக்கின்றேன்
என் குரலுக்கு
உன்னிடம் பதில் இல்லை
ஏன்…?

இறைவா
தெளிவான
வேதம் தந்தாய்
அறிவான
ஆசான் தந்தாய்
விரிவான
விளக்கம் தந்தாய்
அதை
விரித்து பார்க்க
என் விழி
வழிச் செல்ல வில்லையே…

பாவியாய்
உன் வேதத்தை படித்து
கொண்டிருப்பதால்
பார்வையிலும்
நீ யிருப்பதை
பார்க்காத
எனதறிவில்
உனை
எங்கேயோ
வைத்து விட்டது
என் எண்ணம்…!

இறைவா
கண்களால் காணமுடியாத
பரம் பொருளாயிருக்கிறாய்
அறிவிலே உனை
அலசும் போது
அறிவாகி
புறக்கண்களுக்கும்
ஆளுமையாய்
காட்சியளிக்கிறாய்...
உனை
விளங்கும் போது
ஒளியிலும் புரிகின்றேன்
விளங்காத போது
இருளாய் மட்டுமே
பார்க்கிறேன்…

அகிலத்தின்
அருட்கொடை
அண்ணல் எம்பெருமானாரை
நேசித்தால் தான்
இறைவா
உன்னின் உண்மை
என் அறிவுக்குள் உலாவரும்…

உயர்வான உன் வேதம்
உம்மி நபியின்
உரைப்பினால்
உயிர் வாழ்கிறது
இறைவா…

உன்னுடைய
ஆட்சியையும்
ஆளுமையையும்
நீ நிகழ்த்தும்
அதிசயங்களையும்
அறிந்து விடுவதினால்
நான் உன்னை
அறிந்ததாய் ஆகிவிடுமா…?

இந்த பிரபஞ்சத்தை
படைப்பதற்கு முன்
நீ மட்டுமே இருந்தாய்.
படைப்புகளை
படைத்துப் பார்க்க
உனக்கு ஆசை
‘குன்’-என்று சொல்லி
அனைத்தையும் படைத்து
அனைத்துமாகி விட்டாய்
என்னிலிருந்து
உன்னை
எப்படி
வேறுபடுத்தமுடியும்.
அது
மாறுபாடல்லவர்

உன்னை என்னிலும்
என்னை உன்னிலும்
காணவில்லையெனில்
இணை வைத்துவிட்டேன்
இறைவா
உனக்கு
இணை வைத்துவிட்டேன்.!

20.பிரமசாரிகள்

பிரமசாரிகள்…

வாழ்க்கை
பிரமசாரத்திலிருந்து
துவக்கம்…

திருமணங்கள் அமைவதெல்லாம்
மனங்கள் தேடிய வரம்…

வாழ்க்கை
சிலருக்கு பிரமை
பலருக்கு பிரமாதம்…

வாழ்க்கைப் பயணத்தை கடப்பதற்கு
திருமணமாகி சிலர்
பிரமசார வேடத்தில்
பயணம்…

கரம் நம்பி
கரைக்கடந்தோம்
நம்பிக்கைகளில்…

நினைவுகள்
நித்தமும் நித்திரைக்கு முன்
மன அரங்கில் ஒடும்
திரைப்படம்…

தொலைபேசியில் தொடரும்
வாழ்க்கை நிகழ்வுகளின்
வரைபடம்…

பிறந்த குழந்தையை
அள்ளிஎடுத்து
நெஞ்சோடு அணைத்து
முகர்ந்து முத்தமழை
பொழிவது
நிழற்படங்கள்…

பொருள் சேர்க்க
பொறுமையுடன் காத்திருக்கும்
வெறுமை வாழ்க்கை…

உணர்வுகளும்
உணர்ச்சிகளையும்
முடிச்சுப்போட்டு வைத்திருக்கும்
முந்தானைகள்…

நாங்கள் விடும்
மூச்சு காற்றுக்கும்
கொடுக்கப்படுவது
வாடகை…

நாட்டைகாக்க
இராணுவவீரர்கள் எல்லைகளில்
வீட்டைக்காக்க
எல்லைத் தாண்டி
நாங்கள்…

தாயகம் திரும்பும்
விடுமுறைகளில்
தாகமில்லை
தாழமுமில்லை
வீடு சேரும் வரையில்
மனமெல்லாம்
மின்னிடும் விண்மீன்கள்…

பொருளை சம்பாதிக்க
இளமையை சிலவளித்தோம்
இளமையை சம்பாதிக்க
எதை சிலவு செய்வது…?

இது எங்களின்
சோகக்கதை அல்ல
வாழ்க்கை கதை…!

19.கோபம்

ஆறுவது சினம்


கோபம்
கொடிய நோய்…

இந்த நோய்
இல்லாத மனிதர்களை
காண்பது பொய்…

சினத்தால்
சினேகிதம்
சிதைந்து போவது
மெய்…

கோபம்
வாழ்கையின்
வழிதடத்தை
மாற்றி விடும்
கோணம்…

கருத்துக்கள்
கருவாகி
கருநெறியில்
கருச் சிதைவு…

நான் நீ என்ற
போட்டிகளில்
பொடிகளாய் போகும்
பொறுமை…

யாருக்காகவோ
வாழ்க்கையை
தொலைத்து விட்டு
தனக்காக
வாழ்பவர்களை
தவிக்க விட்டு
தலையிறக்கும்
வெறுமை…

மதச் சண்டைகளும்
மதில் சண்டைகளும்
மந்தனமில்லாத
மமதையில்…
அரசியலும்
அதிகாரங்களும்
சினம் என்ற
அறுவடையில்…

சின்ன சின்ன
சினத்தினால்
சிதறிவிடும்
சிந்தைகள்…

கட்டுபாடில்லாத
கனற்சியில்
கலைந்திடும்
கடைசி நிமிட
சாதனைகள்…

கோபம்
குடியிருக்கும்
இல்லத்திலும்
உள்ளத்திலும்
விடைபெற்று விடும்
அமைதி…

இரத்த கொதிப்பும்
பித்த திலைப்பும்
கோபத்தின்
வருமானங்கள்…

கடவுளை இழப்பது
கர்வம்
நண்பனை இழப்பது
பொறாமை
தன்னை இழப்பது
கோபம்
இது முதுமொழி…

கோபம்
கொளுந்து விட்டு
எரியும் பொழுது
நீரினில்
நீராடினால்
நிவர்த்தியாகும்.
இது
நிவாரணம்…!

18.ஆயிரத்தி ஒரு ரூபாய் மணமகளுக்கு

ஆயிரத்தி ஓரு ரூபாய் மணமகளுக்கு…

வாழ்க்கை ஒப்பந்தங்கள்
இன்று
வியாபார சந்தைகளாக…

‘மஹர்;’ கொடுத்து
மணக்கவேண்டிய நங்கைகள்
பணமும்
தங்கநகைக் கடைகளுமாய்
நகர்வலம்…

அன்று
பெண் சிசுக்கள்
கருவறையின்
ஈரம் காய்வதற்கு முன்
மண்ணறைக்குள்…

இன்று
கன்னிப்பெண்கள்
மணவறை காண
வாழ்க்கையின் நிர்ணயம்
சில்லரைக்குள்…

வசதியற்றவர்கள்
வயதை கடக்கும்
தன் பெண்ணுக்கு
மாப்பிள்ளை சந்தையில்
பேரம் பேச முடியாத
ஊமைகள்…

பெற்றோர்களின்
சொல்லைத் தட்டும்
சில இளைஞர்கள்
திருமண விசயத்தில் மட்டும்
தீர்க்கமாய் தலைக் குனியும்
நாணிகள்…

திருமணத்தின் போது
தீவிரமாய் வாசிக்கப்படும்
ஆயிரத்தி ஒரு ரூபாய் மணமகளுக்கு…

தீன் முறைப்படி
திருமணம் என்று
அச்சடிக்கப்படும்
அட்டைகள் பேசும்
ஆனால்
ஆயிரத்து ஒன்றை
அளித்துவிட்டு
பல
ஆயிரங்களை பறிக்கும்
அடுக்கு வட்டிகள்…

கொடுக்கல் வாங்கலில்
குறை நிறைந்தால்
மணமகள் வாழ்க்கையில்
விழுவது திரைகள்…

‘ஷரியத்’ என்னும்
சட்டதிட்டத்தை
செயற்படுத்தாதோர்
சமுதாயத்தின்
சலனத்துக் கஞ்சுதல்கள்…

பெண் வீட்டாரை
நிர்பந்திக்காத நிக்காஹ்வும்
ஏழை வீட்டு பெண்ணை மணக்கும்
மனங்களும்
ஏகனின் அருளுக்கு
ஏற்றமுடையவர்கள்…!

17.நிம்மதி

நிம்மதி…

பெற்ற அன்னையை
பேணிக் காப்பதில்
நிறைந்து விடும்
நிம்மதி…

வளர்த்த தந்தையை
வாட விடாமல்
வாழ வைப்பதில்
கிடைத்து விடும்
நிம்மதி…

தம்மை நேசிக்குமளவு
பிறரையும் நேசிக்கும் போது
மலர்ந்து விடும்
நிம்மதி…

அண்டை வீட்டாரிடம்
அன்போடு
பழகும் போது
நம்மை அணிந்து கொள்ளும்
நிம்மதி…

உதவிக்கு முன்
உதவுவதில்
உறவு தரும்
நிம்மதி…

அறிவைப் பெற
ஆசானிடம்
நம்மை அர்பணிக்கும் போது
அஞ்ஞானம் போக்கிடும்
நிம்மதி…

மனிதன் மனிதனாக
வாழும் போது
மகுடம் சூட்டி விடும்
நிம்மதி…

நிம்மதி நம்மிடம்
நிறைந்து இருக்கிறது
நாம் வேண்டினால்
நம்முள்ளும் வரும்…!

16.பிரிவு

பிரிவு…

கருவறையை
பிரிந்த பொழுது
நான் அழுதேன்…
பள்ளிக்கு அனுப்பி விட்டு
தாய் அழுதாள்…

கல்லூரி படிப்பு முடிந்து
நாங்கள் அழுதோம்…

காதலை பிரிந்து
காதலர்கள் அழுகிறார்கள்…

கணவனை பிரியும் பொழுது
மனைவி அழுகிறாள்…

உயிர் பிரியும் பொழுது
உறவு அழுகிறது…

பிரிவு என்பது
காலமும் தூரமும்
செய்த நிர்ணயம்…

எண்ணத்திலும்
உள்ளத்திலும்
நினைவு
வாழுகின்ற பொழுது
எது பிரிந்தது… ?

உடல்
காற்று ஊதப்பட்ட
பந்து- அது
ஆன்மாவால்
அலங்கரித்துக்-
கொண்டிருக்கிறது.

எங்கிருந்து
புறப்பட்டோமோ
அங்கே
சேர வேண்டுமென்பது
நியதி…!

15.அன்னை

அன்னை…


ஆயிரம் பெண்களை விட
சிறந்தவள்
அன்னை…

இறைவன் படைப்பில்
நிறைவான படைப்பு
மனிதன்…
தாயின் கருவ+லமே
இறைவனின்
ஆதாரம்…

தாயின் காலடியில்
சொர்க்கம்
‘தாஹா’ நபிகள் சொன்ன
சொக்கம்…

உதிரத்தை அமுதமாக்கி
உறவை அன்பாக்கி
உயிரை அடைகாக்கும்
களஞ்சியம்
அன்னை…

பிறப்புக்கும்
உறவுக்கும்
சான்றிதழ் அளிப்பவள்
அன்னை…

பிள்ளைகளின்
உழைப்பை விட
சரிரத்தின் நலனில் மட்டுமே
கவனம் கொள்ளும்
அகல் அன்னை…

லட்சங்களை சம்பாதித்தாலும்
தாயிடம் நேசமில்லை எனில்
வாழ்க்கையில் இல்லை
லட்சணம்…

தேடி தேடிச் சென்றாலும்
தேவையானதை தேடலாம்
ஆனால் அன்பை
அவள் மட்டுமே அளிக்கும்
அமுதசுரபி அன்னை…

தாயிடம் ச்சீ…என்ற
வார்த்தையை எவன்
உதிர்த்தானோ
அவன் நீசன் என்று கூறும்
அல் குர்ஆன்…

அன்னை
அரிச்சுவடி கற்றுத்தரும்
ஆசிரியை
நடைபயில வைக்கும் நாயகி
அறிவை புகட்டும் ஆசான்
நோய் தீர்க்கும் மருத்துவர்
அழகுபடுத்தி அழகு பார்க்கும்
கலைஞி
பசியை போக்கும் பயிர்…

அன்னைக்கு நிகர்
அவளே…!

14.அரசியல்

அரசியல்…

அரசியலில்
நேர்மையான தலைவர்கள்
வாக்கு மாறாத
அமைச்சர்கள்
மக்கள் சேவையே
தங்கள்
தேவையெனக் கருதி
அயராது உழைப்பவர்கள்
அரசு உடமைகளை
தங்கள்
சுயநலத்திற்கு
உபயோகிக்காதவர்கள்
பொது நலமே
அவர்களின் பொழுதுபோக்கு
இவையெல்லாம்
நான் படித்த சரித்திரத்தில்…

கடமைத் தெரியாத
கண்ணியம் விளங்காத
கட்டுப்பாடில்லாத
அரசியல் வாதிகளுக்கு
மத்தியில்…

கொலைகள் கொள்ளைகள்
கற்பளிப்பில் தேர்ச்சி
இவையே
இன்றையஅரசியலின்
வளர்ச்சி…

அரசியல் என்பது
சூதாட்டம்
ஆட்சிமுறை அமைப்பதற்கு
ஆடும் பித்தலாட்டம்…

ஆட்சியாளர்கள்
தவறுகள் செய்யாமலிருக்க
மக்களின் பாதைகள்
நேர்மைகளில்…

தலைவர்களையும்
தகுதியானவர்களையும்
தேர்ந்தெடுக்கும் பொறுப்புகள்
நம் கைகளில்…

கைகள்
நம்மிடம் இருக்கும் வரை
அவர்களின் தலையெழுத்து
நம் தூரிகைகளில்…

நல்லாட்சி நல்குவதற்கு
மக்கள் சிந்திப்பவர்களாக
அல்லது
ஆட்சியாளர்கள்
மக்களைச் சிந்திப்பவர்களாக
இருத்தலே சீர்மை…

கலீபாஹக்களின் ஆட்சிமுறை
இந்தியாவில்
மலரவேண்டும் என்பது
மகாத்மா காந்தியின்
ஒருமைப்பாடு…

இருண்டகாலங்த்தில்
வெளிச்ச
அரசியல் தந்தார்கள்
அபுபக்கர் சித்தீக் (ரலி)…

வாழ்க்கையின் தேவைக்கு
வணிகம் செய்தார்
ஆட்சிதலைவராக ஆனபின்னும்
வணிகமே …

தோளில் துணிச் சுமை
வெற்றுக்காலுடன்
வீதியில் வந்தபோது
ஒரு குரல்…

நாடாளும் மனிதர்
வீதியில் வணிகராய்
வந்தால்
நிர்வாகம் யார் கையில்…?

இந்த குரலுக்கு
சொந்தக்காரர்
கலீபாஹ் உமர் (ரலி)…

வணிகம் செய்கிறேன்
வயிற்றுப் பசிக்கு
என் குடும்பம் பொறுப்பை
யார் ஏற்பது
பதிலுரைத்தார்கள்…

இவைகள்
கற்பனை அல்ல
நிகழ்ந்த காலத்தின்
சத்தியம்…

இவை
படிக்க சுவைக்கும்
நடைமுறைப்படுத்த..?

முயன்றால்
முயற்ச்சிகள்
முற்றுப்பெறுவதில்லை…

இன்றைய தலைவர்களின்
குடும்பங்கள் வளர்ச்சி
அரேபிய நாட்டு
ஆட்சியாளர்களைப்போல்…

தன்னை உணர்ந்த
தலைவனே
மக்கள் தேவையினை
தீர்க்கும் சீலன்…

கல்லூரிகளில்
நுழைவுத் தேர்வு
எழுதுவதைப் போல்
ஆட்சி பீடங்களில்
அமருபவர்கள்
நல்லாட்சி தந்தவர்களின்
வாழ்க்கையை படித்து
எழுதவேண்டும் தேர்வு…

தேர்வில் தேர்ச்சிமட்டுமல்ல
வாழவும் வேண்டும்
தவறுபவர்கள்
ஆட்சியிலிருந்து விலக்கி
கொடுக்க வேண்டும்
தண்டனை…

இவைகளை
நடைமுறைப் படுத்துவதற்கு
நான் தயார்
ஒட்டுப்போட
நீங்கள் தயாரா…?

13.கணக்கு

கணக்கு…

கணக்கு
இது இல்லாதவர்களின்
வாழ்க்கையில் பிணக்கு…

வாழ்க்கை கணக்கை
போடத் தெரியாவர்களின்
வாழ்க்கையில் சறுக்கு…

மனித வாழ்க்கை
விதி என்ற கணக்கு
உலக வாழ்க்கை
மதி என்ற கணக்கு…

இறைவன் ஆறு நாட்களில்
உலகத்தை படைத்த
கணக்கு…

மனித இனம் வளர்ச்சியடைய
பல மில்லியனில்
அணுக்களின் கணக்கு…

குடும்ப வாழ்க்கைக்கு
வரவு செலவு கணக்கு
செயல்களில்
நன்மை தீமை கணக்கு…

கற்பிப்பதற்கும்
கற்றுக் கொள்வதற்கும்
நேரங் காலம் கணக்கு…

இறைவனை வணங்க
ஐங்காலத் தொழுகை
கணக்கு…

தவறுகள் செய்ய நினைப்பது
தப்புக் கணக்கு
தானங்கள் செய்வது
தர்ம கணக்கு…

கொடுக்கல் வாங்களில்
கூட்டுக் கணக்கு
கொடுக்காமல் வாங்குவது
யாசகக் கணக்கு…

சொத்துக்களை வாங்குவது
ஆசைக் கணக்கு
சொந்தங்களை வெருப்பது
மோசக் கணக்கு…

மன்னித்து மறப்பது
நேயக் கணக்கு
மனிதர்களுக்கு உதவுவது
புண்ணியக் கணக்கு…

இறையை வணங்குவது
பக்தி கணக்கு
இறையை அறிய எண்ணுவது
நம்பிக்கை கணக்கு…

தன்னை அறிய ஆர்வப்படுவது
சுயக் கணக்கு
தன்னை அறியாமல் இருப்பது
பாவக் கணக்கு…!

12.அன்பு

அன்பு…

உலகத்தின்
உயிர் நாடியும்
உயிரினங்களின்
உதிப்பும்
அன்பின் வெளிப்பாடு…

அன்னை
அன்பை பொழியும்
அட்சய பாத்திரம்
தொப்புள் கொடி உறவே
அன்பின்
ஆரம்ப பாடச்சாலை…

கணவன் மனைவி உறவில்
அன்பும்
அன்னியோன்னியமும்
இல்லையெனில்
ஆயுள் வரையில்
வாழ்க்கை இல்லை…

அன்பில்லா செயலில்
உறவுவில்லை
உணர்வில்லை
உயிருமில்லை…

அறிந்தவருக்கும்
அறியாதவருக்கும்
தூய்மையான அன்பினை
வழங்கினால்
இதயங்களில் கட்டப்படும்
இலக்கண தாஜ்மஹால்…

வயோதிகர்களுக்கு
வயிறு நிரம்ப உணவைவிட
மனம் நிறைந்த அன்பே
பசியைப்போக்கி
அவர்களின்
வாழ்வை வளமாக்கும்
வரம் தரும்
அன்புமஹால்…

மதங்களும் மார்க்கங்களும்
மனிதர்களுக்கு
போதிப்பது அன்பு
அதில்
வாழ்ந்தவர்களுக்கு
அகிலம் கொடுத்திருப்பது
அடையாளங்கள்…

அன்பை மட்டுமே
வாழ்க்கையாக்கி வாழும்
அன்னைகள்
அன்பினால் கட்டினார்கள்
அனாதை இல்லங்கள்…

அன்புடன் பழகினால்
மிருகங்களும் கூட
மனிதர்களின்
நண்பர்கள்…

அன்பு குடியிருக்குமிடத்தில்
ஆண்டவன் இருப்பான்
என்பது
அன்பு மொழி…

நோயாளிகளைக் கண்டு
அன்போடு
நலன் விசாரிப்பது
நன்மை பயக்கும் என்பது
அண்ணல் நபிகள் இயம்பிய
அழகிய பாத்தியம்…

பிரிந்து போன உறவுகளை
பரிவும் பாசத்திலும்
மலரச்செய்யும் அன்பில்
மருளிலில்லை…

அன்பு அடங்கும் போது
ஆணவமும் அதிகாரமும்
தூக்கும் தலை
அமைதி இழந்திடும் கலை
அன்புக்கு இல்லை விலை…!

11.காதல்

காதல்…

ஆன்மாவின்
ஆரம்பம் காதல்
காதல் விளையாத உள்ளத்தில்
உயிரில்லை…

தடுக்கப்பட்ட கனியை
ஆதம் ஹவ்வா
உண்டதின் நோக்கம்
காதல்…

பேரரசுகளின்
பெருமகன்கள்
காதல் பேதமையில்
கவிழ்ந்த கதைகள்
காதல்…

ஆணும் பெண்ணும்
உடலோடு உடல்
நேசிப்பில் அல்ல
காதல்…

காதல்
ஆடையிழந்த அலங்காரம்
அணிபவர்களுக்கு
அது அநுராகம்…

காதல் அரும்பும் நெஞ்சத்தில்
துன்பங்களும் துயரங்களும்
போய் விடும் தூரம்…

காதல் தூய்மையானது
தூசிகள் நிறைந்தால்
தூரல் ஆவது காதல் அல்ல
காதலர்கள்…

தேகத்தில் மட்டுப்பட்டு
மோகனத்தில் வளர்ந்து
வேகத்தில் புரிந்த காதல்
சோகத்தில் முடியுரை…

மதுவில் உள்ள மயக்கம்
காதலில் அது நிலைக்கும்
மருள் இல்லா காதலே
மலரும் காதல்…

வேற்றுமைகளைக் கலைந்து
ஒற்றுமைகளில் ஒன்றித்தலே
ஏகத்துவ காதல்…

மகான்கள்
மாட்சிமை மிக்க
இறை மீது கொண்ட காதல்
நிறைவாய் நிலைத்திடும்
நித்தியக் காதல்…

நேசமிக்க நெஞ்சங்களை
அன்புமிக்க உள்ளங்களை
இன்மையின் இதயங்களை
இறைவன் கொள்கிறான்
சத்தியக் காதல்…

தன்னையன்றி
அனைத்திலும் கொள்ளுவது
சிற்றின்பக் காதல்
தன்னில் கொள்வதே
பேரின்பக் காதல்…!

10.கடமைகள்

கடமைகள்…

கடமையைச் செய்
பலனை
எதிர்பார்க்காதே
இது
வேதங்களில்…

நன்மை செய்தால்
சுவர்க்கம்
தீமை செய்தால்
நரகம்
இறைவன் அமைத்த
தேர்தல் களங்கள்…

படைப்புகளுக்கும்
படைத்தவனுக்கும்
இடையில்
கடமையின்
கணக்குகள்…

கடமைகளை
செய்து விட்டு
பலனுக்காக
காத்திருப்பது
மழையைத் தேடும்
பயிர்கள்…

எதிர்பார்ப்புகளோடு
கடமைகளை
கரை சேர்ப்பதால்
மனங்கள் சுமப்பது
பொதிகள்…

பால் கொடுத்தவளுக்கு
தோள் கொடுக்க
தோணுதலின்
விடை தேடும்
விடுகதைகள்…

எதிர்பார்புகளின்
பாதிப்புகளால்
உறவுகளுக்கு
கொடுக்கப்படும்
விடுமுறைகள்…

கடமைகள்
சிலருக்கு சுயநலம்
அதனால்
வளர்ந்து
முதிர்ச்சியடைகிறது
முதியோர்
இல்லங்கள்…

தவறிப் போகும்
கடமைகளால்
தடுமாறும்
உள்ளங்கள்…

சிலர்
கடமைகளில்
கண்கள் …

சில
சமயங்களில்
மூடப்படுகிறது
அவர்களது
இமைகள்…

இன்று
நாம் விதைப்பது
நாளை நமது
அறுவடையில்…

தான் என்ற
சுயத்தினை
தேடும் கடமையே
சந்தேகங்களின்
சந்திப்பு தரும்
விடைகள்…!

9.ஏழையின் சிரிப்பில்


ஏழையின் சிரிப்பில்….

வறுமையில்
வாழ்வைத் தொடங்கி
வெறுமையில்
வாழ்பவர்கள்
ஏழைகள்…

வயிற்று பசியோடு
இவர்களது
வாழ்க்கை
விடியலை
நோக்கி…

இரவும் பகலும்
உழைத்தாலும்
இவர்கள்
வாழ்க்கை மட்டும்
இன்றும்
இருள் தான்…

கள்ளர்கள்
புல்லர்களும்
ஏமாற்றி
விளையாடுவது
ஏழையின்
மைதானம்…

எதிர்பார்;த்து
எதிர்பார்த்து
ஏமாறுவது
பொருளுக்கல்ல
ஓரு வேளை
உணவிற்கு…

கந்தலான ஆடையும்
கசங்கிப் போன
வாழ்க்கையும்
பழகிப்போன
பழக்கம்…

இவர்கள்
ஏழைகள் தான்
ஆனால்
கோழைகள் அல்ல…

நம்பி வாழ்கிறார்கள்
எங்கள் சிரிப்பில்
இறைவன் இருப்பதாய்…

இவர்களுக்கு
சேரவேண்டிய
சொத்து
நம் பத்தில்
பத்திரமாக…

மனைகளாய்
மாடிகளாய்
வங்கிகளில்
வட்டிகளாய்
வளமான வளர்ச்சியில்…

இவர்கள் நம்மிடம்
பிச்சை கேட்கவில்லை
அவர்களுக்குரிய
வரிகளை கேட்கிறார்கள்…

ஆம்
ஜகாத்-எனும்
ஏழை வரியை
நீதமாய் தந்தாலே
நீங்கிவிடும்
ஏழைப்பிணி…!

8.அமைதி

அமைதி…

அமைதி
எங்கிருக்கிறது
எதில் இருக்கிறது
எப்படி இருக்கிறது…..?

தேடி கிடைப்பதற்கு –
இது
தொலைந்துபோன
பொருள் அல்ல…

தோண்டி
எடுப்பதற்கு
இது புதைந்து போன
புதையல் அல்ல…

காடுகளில்
மலை மேடுகளில்
அமைதியைத் தேடி
தன்னை
அலைய்யவிடுவதில்
கிடைப்பதும் அல்ல…

தம்மை
தணிவு படித்தி பார்த்தால்
நம் எண்ணத்தில்
தூய்மையும்
உள்ளத்தில்
உண்மையும்
செயலில்
நேர்மையும்
நம்மிடம்
விளையும் போது
தென்றலாய்
தழுவிக்கொள்ளும்
அமைதி…!

7.போராட்டங்கள்

போராட்டங்கள்

உரிமைக்காக வேண்டி
உண்ணா விரத
போராட்டம்…

ஊதிய உயர்வுக்காக
வேலை நிறுத்தம்
போராட்டம்…

சிலையை
சீண்டியதால்
சாலை மறியல்
போராட்டம்…

சீலை வாங்கி
தராததால்
தாரம் செய்யும்
போராட்டம்…

ஆசிரியர்;
அதட்டியதால்
மாணவர்களின்
போராட்டம்…

ஏழைகளுக்கு
பசியோடு
போராட்டம்…

எல்லைகளில்
நாடுகள் செய்யும்
போராட்டம்…

குடும்பங்களோடு
குழந்தைகளோடு
ஊரோடு
உறவோடு
சமுதாயத்தோடு
சாதிகளோடு
இப்படி
தொடரும்
போராட்டங்கள்…

போராடி போராடி
பொங்கியது
நம் வாழ்க்கையில்
பல வெற்றிகள்
தோல்விகள்…

போராடினால்
வெற்றி நிச்சயம்
என்பது
அனுபவம் தரும்
அனுகூலம்…

பொருளுக்காக
பெருமைக்காக
பதவிக்காக
புகழுக்காக
போராடி விளைந்த
வெற்றி -அது
கானல் நீரை
தாகத்தோடு
காண்பதைப்போல்…

போராட்டம்
மனித வாழ்க்கைக்கு
அளிப்பது
நீரோட்டம்…

நம்
எண்ணங்களோடும்
மனதோடும்
போராடி
போர்க் கொடி
உயர்த்துவதே
உண்மையான
போராட்டம்…
பொறாமைகளோடு
பொய்களோடு

புறம் பேசுவதுகளோடு
ஏமாற்றுதல்களோடு
நய வஞ்சகங்களோடு
களவுகளோடு
பிணக்குகளோடு
பித்தலாட்டங்களோடு

தீமைகளோடு
தீவிரமாய்
போராடி
எண்ணங்களை
பதியம் போட்டால்
பூத்து குலுங்கும்
மனமெல்லாம்
நல்லெண்ணம்
நந்தவனம்…

அந்த பூவணத்தில்
பூத்தவர்களே
சாந்தி நிறைந்த
சம்பூரண மனிதர்கள்…

இதை தான்
‘இஸ்லாம்’
கூறுகிறது
‘நப்ஸ்’சுடன் போராடுவது
‘ஜிஹாதுல் கபீர்’…!

6.எல்லாமிருந்தும்

எல்லாமிருந்தும்…

கோடி ரூபாயில்
வங்கிக் கணக்கு
தெருக் கோடியில்
தொடும் வானம்
வரையில்
வசதியான பங்களா…

பல அடுக்கு கட்டிடங்கள்
பல வண்ணங்களில்
வாகனங்கள்…

வசதிகள்
வளமானது தான்…

இருப்பதை யெல்லாம்
எண்ணத்தில்
சேமித்தோம்…

எண்ணி எண்ணி
சேமித்த எண்ணத்தில்
சில
எண்ணிக்கைகள்
தணிக்கையில்
தவறிவிடும் போதும்
நஷ்டங்கள் நம்மை
நலம் விசாரிக்கும் போதும்
மனம் படுகிறதே
கஷ்டம்…

வாழ்க்கை
வசதியாக வாழ்வதற்கு
ஆனால்
வசதி இருந்தும்
பல தருனங்களில்
மனதிற்கு
தேவைப்படுகிறது
விசிறி…

வாழக்கையை
ஏழ்மையாக்கிக் கொண்டால்…?

ஏகனின்
இருப்பிடம் ஏழ்மையில்
என்கிறான்…!

ஏழ்மை என்பது
இல்லாத நிலை…

எது இல்லை…?

எல்லாமிருந்தும்

எண்ணத்தில்
எண்ணிக்கை இல்லை
சிந்தனையில்
சேமிப்பு இல்லை…

அசையும் சொத்தும்
அசையா சொத்தும்
அவருக்குரிய இடத்தில்
அமைதிக்காணும் போது

வேதனையும்
சோதனையும்
நம்
வாழ்க்கையில்
ஏது…?

5.ஆசைகள்

ஆசைகள்

ஆசையின் அசைவே
இந்த
பிரபஞ்சத்தின்
பிம்பங்கள்…

அறியப்பட நாடியதால்
அகிலம் படைக்கப்பட்டது
இது
அருளாளனின்
ஆசை…

அருவாயிருந்து-தாயின்
கருவறைக்குள்
ஆரம்பமானது-ஆசையின்
ஒசை…

குழந்தை மீது ஆசை
குலம் மீது ஆசை
பொருள் மீது ஆசை
பொன் மீது ஆசை
பெண் மீது ஆசை
மண் மீது ஆசை…

உண்பதில் ஆசை
உடுத்துவதில் ஆசை
நோக்கியதில் ஆசை
தேக்கியதில் ஆசை…

இப்படி ஆசைகளை
அலங்கரிக்கலாம்
ஆசையாய்…


மனிதனுக்கு
ஆசை இருக்கும் வரையில்
எண்ணத்தில்
ஒளித்துக் கொண்டிருக்கும்
இசை என்ற
எதிர்பார்ப்புகள்…

முயற்சிகளும்
முன்னேற்றங்களும்
முடிசூடுவது
ஆசையின்
முகூர்த்தத்தில்…

அளவுக்குள்
அடங்காத ஆசைகள்
அறிமுகம் தருவது
ஆபத்தின்
யதார்த்தத்தில்…

வாழ்க்கையில்
ஏற்றங்களும்
ஏமாற்றங்களும்
ஆசையின் ராகத்தில்
ஆடிடும்
இராட்டினங்கள்…

நிறைவேறாத
ஆசையினால்
அடக்கப்பட்டும்
சில ஆன்மாக்கள்
ஆடுகின்றது பரதங்கள்…

தன்னை மட்டும்
மறந்து விட்டு
தரணி முழுவதையும்
ஆசைக்கொண்டோம்…

தன்னை
ஆசையாக்கும் போது
பொய் நிலை மாறி
அறிவு
மெய் நிலையில் மலரும்…!

4.மனிதா நாம் என்பது யார்...?

மனிதா நாம் என்பது யார்…?

மனிதா
நம்மை
மனிதனென்று
என்றாவது
உணர்ந்ததுண்டா.?
உணர்வதற் குரிய வாய்ப்பு
நமக்கு
கிடைத்ததுண்டா.?

கைகளையும்
கால்களையும்
கண்களையும்
காதுகளையும்
நம்பி
நம்மை மனிதனாக
எண்ணிக்கொண்டிருக்கிறோம்
மனிதா
எண்ணமல்ல நாம்…

மனிதா
நாம் படிக்கப்படாத
புத்தகமாக இருக்கிறோம்.
கலுவப்படாத
கரையாக இருக்கிறோம்
நாம் கரையும் போது – நம்
கருவைக் காண்போம்…

மனிதா
படைக்கப்பட்ட நாம்
நம்மைப் பற்றி
தெளிவில்லாத போது
நம்மைப் படைத்த
இறையை நாம்
எப்படி தெளிவாய்
விளங்கிருப்போம்…

மனிதா
மதத்தை நாம்
நேசிக் குமளவு
மனிதர்களை
நமக்கு
வாசிக்கத் தெரியவில்லை.
நேசம்
மதத்திற்கு தேவையில்லை
மனிதனுக்கு தேவை;

மதம்
மனிதனை மனிதனாக்கும்
பட்டறை
இந்த பட்டறையில்
படிந்திடாத
நம் நிலை
இருளரை தான்…

மனிதா
மனித நேயம் என்பது
தன்னைத் தான்
நேசிக்கும் மளவு
அனைவரையும்
நேசிப்பதா கும்…

இதில் வேறுபாடோ
மாறுபாடோ
நுழைந்தால் அது
மனித நேசமல்ல
அது வேசம்…

மனிதா
பாம்பு யென்றால்
படை
நடுங்கியது அன்று
இன்றோ
‘பாம்’ என்றால்
நாடே நடுங் குகிறது.
இந்த நடுக்கம் -
நம்
அறிவில் ஏற்பட்ட
விளக்கம்…

பாம்பையும் பாமையும்
அறிந்த நாம்
தனையறியாமல்
இருப்பதேன்…?

மனிதா நம்
வாழக்கையில்
துக்கங்களும்
துயரங்களும்
மலரும் போது
வாடி விடுவோம்
காரண அறிவு
நம்மிடம்
இல்லாததால்
காரியங்களைக்கண்டு
கலங்குகிறோம்;
விதையை நாம்
அறிந்திட்டால்
விதைக்குள் விருட்சத்தை
காண்போம்…

மனிதா
மிருகங்கள்
தன்னைத்தான்
சிந்திப்பதில்லை
சிந்திக்குமாற்றல்
அதற்கில்லை
அதனாலே
அவைகள்
மிருகங்களாய் வாழ்கின்றன
சர்வத்தையும்
சிந்திக்கும் திறன்
நமக்கிருக்கிறதே;
நாம் எப்போது
மனிதனாகப் போகிறோம்…?

மனிதா
களி மண்ணிலிருந்து
முதல் மனிதர்
ஆதமை
இறைவன் படைத்து
தனது ஆத்மாவிலிருந்து
ஊதினான்

உடலோ
களி மண்ணாலானது
ஆத்மா
இறைவனுடையது
இந்த
இரண்டிற்குமிடையில்
நாம் என்பது யார்…?

மனிதா
நம்மை
புதைக்கப் படுமுன்
நம்மிடம்
புதையுண்ட இரகசியத்தை
புரிந்து விடுவோம்
பரிபூரணத்தில்
கலந்து விடுவோம்…!

3.தேடல்

தேடல்…


இறைவனைத் தேடி
இமயம் வரைச் சென்றாலும்
கண்டிப்பாக
காணப்போவதில்லை…

விண்கலம் ஏறி
விண்ணுலகம் விரைந்தாலும்
வீணாகுவது நேரம்…

கடலுக்கடியில்
தரையைத் தொட்டாலும்
கரைவது காலம் …

வெளித் தேடலைக்
கை விட்டு
தன்னிடம் தானே
தனித்திடும் போது
விளங்கி விடும்…

தானும்இ சர்வமும்
ஓன்றே. . .
தன்னை சர்வத்திலும்
சர்வத்தை தன்னிலும்
காண்பதே
தேடலின் தெளிவு…!

2.அது எதுவாக இருந்தாலும்

அது எதுவாக இருந்தாலும்

துணிக்கடையில்
துணிவாங்கும் போது
துவைத்தால்
சாயம் போகுமா
சுருங்குமா
தரமா உரமா
என்ற
ஆராய்ச்சிகள்…

காய்கறி கடையில்
சொத்தையா
முத்தலா
அழுகலா
இளசலா
போன்ற
தேர்வுகள்…

பெண் பார்க்கும் போது
அழகு
படிப்பு
குணம் மணம்
குடும்பப் பாங்கு
நடை உடை
நளினம்
வசதி அந்தஸ்த்து
அக்கம் பக்கத்தில்
விசாரணைகள்…

வீடு கட்டும் போது
சாஸ்திரம்
சம்பரதாயம்
காற்றோட்டம்
நீரோட்டம்
வாஸ்து
வாசல்
யோசணைகள்…

படித்து விட்டு
எந்த வேலைக்கு
போகுவது
உள் நாடா
வெளி நாடா
எதில் அதிகம் சம்பாதிக்கலாம்
அலுவலகங்களின்
நிலவரம்
ஜாதகம்
அனைத்தையும்
அலசல்கள்…

இப்படி
எல்லா விசயங்களிலும்
அலசி ஆராய்ந்து
விசாரணைகள் செய்து
யோசனைகள் செய்து
வாழும் நமக்கு

இறைவனுடைய
விசயத்தில் மட்டும்
அவன்
கல்லாக இருந்தால் என்ன
புல்லாக இருந்தால் என்ன
கருப்பாக இருந்தால் என்ன
சிவப்பாக இருந்தால் என்ன
உருவம் இருந்தால் என்ன
அருவமாக இருந்தால் என்ன..

எனக்கு இல்லை கவலை
என்பது போல்
நம்பி வாழ்வது
நன்நம்பிக்கையா
மூட நம்பிக்கையா…?

1.இறைவா உன்னிடம்


இறைவா உன்னிடம்…


இருகரம் ஏந்துவதும்
உன்னிடம்
என் இன்னல்களை
இயம்புவதும்
உன்னிடம்…

துன்பத்தில் மிகைத்தாலும்
உன்னிடம்
நான் இன்பத்தில்
திளைத்தாலும்
உன்னிடம்…

அகிலப் படைப்பும்
உன்னிடம்
என் ஆத்ம துடிப்பும்
உன்னிடம்…

அன்பு ஒங்குவதும்
உன்னிடம்
என் ஆசைகள் வளர்வதும்
உன்னிடம்…

அபலைகள்
அழுவதும் உன்னிடம்
என் கவலைகள் கூறுவதும்
உன்னிடம்…

ஆறுதல் தேடுவதும்
உன்னிடம்
எனக்கு
மாறுதல் கிடைக்கும்
உன்னிடம்…

‘தக்பீர்’ கட்டுவதும்
உன்னிடம்
என்
‘தக்தீரின்’ நிர்ணயம்
உன்னிடம்…

தலை வணங்குவதும்
உன்னிடம்
நான் தலை சாயும் போது
உன்னிடம்…!

செவ்வாய், செப்டம்பர் 23, 2008

என்குரு தந்த வாழ்த்துதுதிப்பா...

குத்புஸஸமான் ஷம்சுல் வுஜூது ஜமாலிய்யா
அஸ்ஸைய்யித் கலீல் அவுன் மௌலானா
அல்ஹஸனிய்யுல் ஹாஷிமிய் நாயகம் அவர்கள் அருளிய

துதிப்பா

(வெண்பா}

1. நம் பிள்ளை இஸ்மத்து நல்லதொரு நூலதனை
செம்மையுடன் யாத்துள்ளார் சீர்பெருக-வம்பரும்
மெய்யறிந்து வாழ்திடல் மேன்னை பயக்குமே
பொய்யொழிந் தென்றுமே போம்.

2. சீர்குர்ஆன் பற்றியுந் தேனபிகள் யாரெனவும்
பேர்ஞானம் நிம்மதியும் பேறுறும்-நேர்சபையு(ம்)
மற்றும் பலவெல்லாம் மாமதியோ ராய்ந்திடவே
முற்று முரைத்தார் முதல்.

3. மருளில் மலர்கள் மணமிக்க நற்பூ
இருபதோ டைந்து மெழிலாய்-உருவெடுத்
துள்ளதிந் நூலி லுணரப்பெருந்துணையா
யுள்ளத்து ளென்று முறும்.

(வேறு)

பள்ளிக்குள்ளே பாதகஞ் செய்து
எள்ளித் திரிவ ரிழிவு செய்வார்
தலையிற் றொப்பி தரியார் தரியார்
தலையில் லாதார் தகையில் லாதார்
எனவிதிற் பலநல் விளக்கமு முண்டு
மனநிறை நபியை வாழ்த்தி டாதே
எனவுங் கூறி யினிதே யரசியல்

முனைவனை வாழ்த்துந் தன்னறி வில்லார்
எனவும் விரிவுற வெழிலா யியம்பும்
கனிவுறு சொல்லதிற் காண்டற் கியலும்
இனிதுற விந்நூ லிசைவுற நானே
மனமா யென்றும் வாழ்த்து கின்றேனே.

-ஜே.எஸ்.கே.ஏ.ஏ.எச்.மௌலானா

குறிப்பு. தரியார்.-பகைவர்
தரியார் --அணியமாட்டார்
முனைவன்--தலைவன்

டாக்டர் ஜின்னாஷரிபுத்தீன் வழங்கிய வாழ்த்துமடல்...

வாழ்த்து மலர்…

கவிஞர் கிளியனூர் இஸ்மத் தரும் கருத்துப் புதையல்

இலக்கியம் படைப்பது எழிதல்ல. அது எல்லோராலும் இயலுமானதுமல்ல. முதலில் அதற்கு இறையருள் வேண்டும்.
இவைகொண்ட ஒரு படைப்பாளிக்கு ஆர்வமும் ஆற்றலும் ஒன்றி இலக்கியம் படைக்க உதவுகின்றன.

கவிஞர் கிளியனூர் இஸ்மத் அவர்கள் தனது இளமைப் பருவத்திலேயே நாவல் சிறுகதைகள் படைத்ததன்மூலம் தன்னையொரு படைப்பாளியாக இலக்கிய உலகுக்கு இனங்காட்டிக் கொண்டவர். அவைகள் நூலுருப் பெற்றுள்ளன.

இப்போது தன்னால் அவ்வப்போது எழுதி பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் வெளிவந்த கவிதைகளோடு புதிதாக எழுதப்பெற்ற சில கவிதைகளையும் சேர்த்து தனது முதலாவது கவிதைத் தொகுதியாக இதனை கவிஞர் இஸ்மத் வெளிக்கொணர்கின்றார்.

பெரும்பாலும் கவிதைகள் மூலம் தம்மை இலக்கிய உலகிற்கு அறிமுகம்செய்யவிளையும் படைப்பாளிகள் அழகியலில் அதிகம் அக்கறை காட்டுவதுண்டு.கவிஞர் இஸ்மத் அவர்கள் அதற்கு முற்றிலும் மாறாய்ப் பெரும்பாலும் ஆத்மீகத்தைக் கருவாக்கிக்கொண்ட தனது கவிதைகளைத் தொகுத்துத் தனது முதல் கவிதை நூலாக துணிந்து பதிவுசெய்கின்றார். இது ஆத்மீகத்தில் அவருக்குள்ள இறுக்கமான பிடிப்பினையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்து வதாகும்.

தமிழில் யாப்பிலக்கணம் கற்று அதன்வழி கவிதையும் கைவரப் பெற்றவர்களுக்கு மரபுவழியில் கவிதை எழுதுவது மிகவும் எளிதாகும். தேவைக்கேற்ப எவ்வகைக் கருவையும்இஎந்தவகை யாப்பையும் கையாண்டு அவர்களால்பாடிவிட இயலும். ஆனால் நவீன கவிதைக் கட்டு அவ்வாறு எளிதானதல்ல. ஒவ்வொரு வார்த்தையும் தனக்காகப் பொருந்தும் இருப்பிடத்தைப் பெற்றுக்கொள்ளாதவிடத்து உயிரிழந்து கவிதையும் உணர்வற்றுப் போகும். இத்தொகுப்பில் கவிஞர் இஸ்மத் அவர்களுக்கு நவீன கவிதைவடிவம் சொல்லவந்த கருத்தைச் சொல்ல பெரிதும் உதவி இருக்கின்றது.

வௌ;வேறு தலைப்புகளில் மொத்தம் முப்பத்து மூன்று கவிதைகள் இத்தொகுப்பில் அடங்கியுள்ளன. அனைத்தும் நவீன கவிதை உத்திகளைக் கொண்டவைகளே.

தொகுப்பின் முதற்கவிதையான “இறiவா உன்னிடம்” என்னும்கவிதையில் கவிஞர் தன்னை முழுமையாகவே இறைவனிடம் சமர்ப்பித்து விடுகின்றார். தான் அங்கத்தும் வகிக்கும் ஏகத்துவ மெய்ஞான சபையின் மேன்னை பற்றிக் கூறுங் கவிதையில்… முட்களாய்
வீதியில் வளர்ந்த சிலர் இங்கே
ரோஜாப் புஷ்ப்பங்களாய் மலர்கின்றனர் என்றும் கற்களாய்க்
தரையில் கிடந்த சிலர் இங்கு வைரங்களாய் ஜொலிக்கின்றனர் என்றும் கூறுகின்றார்
ஞானம் கற்பது ஞானியாவதற்கல்ல
மனிதனாய் வாழ்வதற்கு

என ஞானம் பற்றியும் நிம்மதி எங்கே என்று அலைபவர்களுக்கு இவரது நிம்மதி என்ற கவிதையும் பதில் சொல்லுகின்றன. அவரது மனிதா ! நாம்என்பதுயார் ? என்றகவிதை மனிதநேயத்தைப் பற்றி மிகச் சிறப்பாகப் பேசுகின்றது.
மனிதா !
மனிதநேயம் என்பது தன்னைத்தான் நேசிக்குமளவு அனைவரையும் நேசிப்பதாகும்
என்கிறார். அத்தோடு மற்றோரு கவிதையில் துன்பமும் துயரமும் மழையாய்ப்
பொழியும் வேளை அதில்
நனைகின்றவர்களுக்கு

குடையாய் நிற்பதே சகோதரத்துவம்
என சகோதரத்துவத்திற்கு உவமை சொல்கின்றார்.

“மதம் என்பது மனிதனை மனிதனாக்கும் பட்டறை” என்பது மதங்களின் வழிகாட்டலின் மேன்னையைக் கூறும் வாசகமாகும்.

உடல் களிமண்ணால் ஆனது. உயிர் இறைவன் தன் ஆன்மாவிலிருந்து ஊதியது. அவ்வாறாயின் நாம் என்பது யார்? என்று வினாத்தொடுப்பதோடுஇநாம் புதைக்கப்படுமுன் நம்மிடம் புதையுண்ட இரகசியத்தை புரிய வேண்டும்என்றும் கூறுகின்றார். இது ஆழமானஇபொருள் பொதிந்தஇசிந்திக்க வேண்டியவரிகளாகும்.

இன்னும் ‘இஸ்லாம் வாளால் பரப்பப் பட்ட மார்க்கம்’ என்று கூறிக்கொண்டிருப்போருக்கு மறுப்புரைக்க அவர் ‘இஸ்லாம் வாளால் பரப்பப் பட்டமார்க்கம் அல்லஇஅது தன்னை வாளால் பாதுகாத்துக் கொண்டது’ என்ற கருத்தை தனது கவிதையில் மீட்டுரைக்கின்றார். ‘

அறிவைத்தேடக் குருவைத்தேடு’ என்ற கவிதையில் மனிதவாழ்வின் தொடக்கமுதல் இறுதிவரை கல்விக்கற்றுத் தெளிவுபெற குருவின் அத்தியாவசியத்தை அழகாக் கூறியிருக்கின்றார் கவிஞர் இஸ்மத் அவர்கள்.

சிறியசிறிய விடயங்கள் சமூகத்திடை பெரியபெரிய பிளவுகள் தோன்றக்காரணங்களாகிவிடும் சீர்கேட்டைச் சாடும்கவிதை “தொப்பி” என்னும் கவிதை.

பெருமானாரின் புகழ்பாடுவது பற்றிய “புகழைப் புகழ் பாடு” என்றநீண்டகவிதையில் இஅன்னாரின் புகழ்பாடியிருப்பதோடுஇ நபிகளார் சொல்லித்தந்த வழியில் நாமும் அவர்கள்மேல் “ஸலவாத்” சொல்லுவதன் சிறப்பையும் கூறுகின்றார். அது இறைவன் காட்டிய உயர்வழி . நன்மை பயக்கும் நலவழிஎன்றும் சுட்டுகின்றார்.

திருக்குர் ஆன் பற்றிய கவிதைஇ குர்ஆனின் உன்னதத்தை பல கோணங்களில் சுருங்குச் சொல்லி இருக்கிறார். “ஏழையின் சிரிப்பில்”…“ஸக்காத்” இன் கட்டாயத்தை உறுதிசெய்கின்றது.
இவர்களுக்குச்
சேரவேண்டிய சொத்து
நம் பத்தில் பத்திரமாக என்றும்
இவர்கள் நம்மிடம்
பிச்சை கேட்கவில்லை
அவர்களுக்குரிய

வரியைக் கேட்கின்றனர்.

என்றும் கவிதையில் அழகாக வெளிப்பட்டுள்ளன. அத்துடன் போராட்டத்தின் வகைகளைச் சொல்லி அவற்றின் விளைவுகளையும்இ உண்மையான போராட்டம் என்பதற்கு விடையும்விளக்கமும் கூறுகின்றார். ஒவ்வொரு மனிதனும் அவனது நப்ஸ் சுடன் போராடுவதே உயர்ந்த போராட்டம் என்றும் புகல்கின்றார்.

“மஹர்”கொடுத்துத் திருமணம் செய்துகொள்ளப்பட வேண்டிய பெண்களிடம்இபணமும் பொருளும் கேட்டலையும் இழிநிலையை இன்று கன்னிப்பெண்கள் மணவறைகாண
வாழ்க்கையின் நிர்ணயம்
சில்லறைக்குள்
பெற்றோர்களின்
சொல்லைத் தட்டும்
சில இளைஞர்கள்
திருமண விசயத்தில் மட்டும்
தீர்க்கமாய் தலை குனியும்
நாணிகள்……

தீன் முறைப்படி
திருமணம் என்று அச்சடிக்கப்படும்
அட்டைகள் பேசும். ஆனால்
ஆயிரத்து ஒன்றை
அளித்து விட்டு பல
ஆயிரங்களைப் பறிக்கும்
அடுக்கு வட்டிகள்…
என்றும் பழித்துரை செய்கின்றார்.

அன்பு பற்றிய ஒரு அழகிய கவிதை. "அன்னை அன்பைப் பொழியும் அட்சயபாத்திரம். அன்பின் ஆரம்பப் பாடசாலை” என்று தாயன்பின் முதன்மையைச் சொல்லுகின்றார்.

அரசியல் பற்றி ஆழமானஇஒரு நீலமான கவிதையும் இத்தொகுப்பில்உண்டு. கலீபா உமர் அவர்களின் ஆட்சிச் சிறப்புப் பற்றியும் இக் கவிதை பேசுகின்றது. இன்று தேர்தலில் வாக்களிக்கப் போகுமுன் வாக்காளர்கள்தெரிந்திருக்க வேண்டிய பல நல்ல உபதேசங்கள் இக்கவிதையில் அடங்கி இருக்கின்றன. இவை பதச்சோறுகளே.

இவ்வாறு இத்தொகுதியில் பல கவிதைகள் நம்மைச் சிந்திக்க வைக்கும் சிறப்புக்களைக் கொண்டன. மொத்தமாய் இது கவிஞர் கிளியனூர்இஸ்மத் அவர்களின் பயனுள்ள முயற்ச்சி. வாசகர்களுக்கான அறிவுத்தீனி.கவிஞர் இதுபோன்று இன்னும்பல தொகுதிகளைத் தழிழிலக்கியத்ற்குஇசிறப்பாய்இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்திற்குப் படைத்தளிக்க வேண்டுமென வேண்டிவாழ்த்துகின்றேன்.

டாக்டர் புலவர் “ஜின்னாஹ்” ஷரிபுத்தீன்
இலங்கை

22ஃ02ஃ2008

என் நண்பனின் வாழ்த்தும்

நள்ளுநர் தந்த நன்னயம்…

காதலுக்கு கவிதை பாடுகிறார்கள்-சிலர் சாதலுக்கு பயந்து தத்துவம் பேசுகிறார்கள்.
எதை எதையோ உலகம் பேசுகிறார்கள் உயரப்பறக்க நினைக்கிருர்கள்-ஆனால் ஒன்றை சிந்திக்க மறந்தார்கள் பலர்.

அந்த ஒன்றை தன் கவிதைப் பூக்களின் மூலம் இவர் நம்மிடம் பாடுகிறார்.எண்ணிலடங்கா ஞானக் கருத்துக்கள் ஏகத்துவக் கருத்துக்கள் இவர் கவிதைகளில் மலர்ந்து இருக்கிறது.

‘தேடலில்’ஒவ்வொருவரும் தேடவேண்டியதை தெளிவாக்கியிருக்கிறார்.
சற்குருவின் அவசியத்தை தரமாக தந்திருக்கிறார்.பலகவிதைகள் எல்லோருக்கும் எளிதாக உள்ளது என்றாலும் சில கவிதைகள் ஞானத்தை ஒரளவாவதுஅறிந்தவர்களுக்கு மட்டும் தான் உட்பொருள் விளங்குவதில் சிரமம் இல்லாமல் இருக்கிறது.

மொத்ததில் ஒரு சிறந்த கவிதைத் தொகுப்பை மக்களுக்குகுறிப்பாக சிந்திக்க துடிக்கும் இஸ்லாமிய மக்களுக்கு வாரி வழங்கியுள்ளார்.

எனது அருமை நண்பர் ‘கிளியனூர் இஸ்மத்’அவர்கள்ஒரு சிறந்த கவிஞர் மட்டுமல்ல ஒரு நல்ல எழுத்தாளரும் கூட.வாழ்க இவரின் ( கவிதை ) ஞானத் தொண்டு…!
எஸ்.ஷர்புத்தீன் அதிராம்பட்டினம் 24ஃ12ஃ2007





மலர்கின்றேன்
கரைந்த
காலத்தை நோக்கி -என் கண்ணோக்கு…கரைத் தெரியாக் கடலில்-கண்கள்கட்டப்பட்ட நிலையில்…எழுத்து எனக்கு தந்த அறிமுகம்ஆத்ம ஞானம்…ஞானப்பாட்டையில் பயின்றுக் கொண்டிருக்கும்என் நடையில்கற்றதை கடுகளவேனும் கரை சேர்க்கவே-இந்தகளம் அமைத்தேன்… அதனால்
உங்களோடு நானும் மருளில்லாமல் மலர்கிறேன்.பொருளும் அருளும் முயற்ச்சியின்றிகிடைக்கப்பெறா…பொருள் சேர்க்க வேண்டி வருணம் பூசுவதை விடஅருள் பெற தருணம் பார்ப்பதுசாலச்சிறந்ததுஅகத்தில் அமைதி விளைச்சல்விளைவதற்கு அது உகந்தது… ‘கலையினிற் சிறந்தது ஞானம்-அதைபயில்பவர்களுக்கு விலகிவிடும்அஞ்ஞானம்…அறிவைக் கொண்டு தான் அறிவை அறிந்திடல்முடியும்…ஒருவர் அனுபவிக்கும் இன்பத்தை அனைவரும்நுகர ஆவன செய்வது நன்மைபயக்கும்.’என்பது –என் ஆசானின்அருள்மொழிக் கோவை…
தன்னை மட்டும் மறந்து விட்டு அனைத்தையும் சிந்திக்கும்ஆராயும்பேதம் நிறைந்த மனிதர்களும் மார்க்கத்தின் ஆணிவேரையும் அடிதளத்தையும்அசைத்துப்பார்க்க ஆர்வப்படுகின்றவர்களுக்குமத்தியிலும்…

முதலும் நானே
முடிவும் நானே
உள்ளேயும் நானே
வெளியேயும் நானே
காலமும் நானே
கோலங்களும் நானே-என்று
அத்வைதம் கூறும்அல் குர்ஆன்…

வேதம் படிப்போரிடம் தெளிவு இல்லையெனில்படைத்தோனின் குற்றமில்லை…
அறிவென்ற ஆயுதம் நம்மிடம் இருக்கும் வரையில் ஆகமம் நம்மை விட்டு அகலாது…

ஆன்மீக நுழை வாயிலுக்குள் அழைத்துச் சென்றஅன்பர்களுக்கு நன்றிகள் சொல்லும் நேரமிது மறக்க முடியாத முகங்கள் நேசமிக்க சகோதரர்கள்…
கண்ணியத்திற்குரியவர்கள்
கலீபா முஹம்மது காலீத்
கலீபா முஹம்மது முஸ்தபா
முஹம்மது சபீர்
வக்கீல் கலீபா லியாக்கத்அலி
கலீபா சிராஜுதீன் அவர்களுக்கும்…

என் நிறைமாத கவிகளை பத்திரிக்கைகளில் பிரசுவிக்க ஊக்கங்களை வழங்கியபாசமிக்க பண்பாளர் சாந்தமிக்க சகோதரர்கண்ணியத்திற்குரிய
கலீபா பொறியாளர் முஹம்மது இக்பால் அவர்களுக்கும்…

படைப்பாளிகளின் படைப்புகளை படைத்திரட்டும் பண்பாளர்என் கவிமலர்களை இதழ் இதழாக இசைத்து கருத்துக்களை கலந்து கதைத்தஇலங்கை மண்ணின் இளவல் கலைமாமணி காவியத்திலகம்டாக்டர் புலவர் ஜின்னா ஷரிபுத்தீன்…அவர்களுக்கும்…

கவிபூக்கள் பூப்பதற்கும் மணப்பதற்கும் மனதால் மகத்துவம் படுத்தியவர்கள் உடலால் உய்தி கொடுத்தவர்கள் உகவைமிக்க சகோதரர்கள் கண்ணியமிக்கவர்கள்
ஆலிம் புலவர் கலீபா ஹுஸைன் முஹம்மது மன்பஈ
அதிரை ஷர்புத்தீன் அவர்களுக்கும்
அறிமுகவுரை தந்தமறைஞானபேழை மாத இதழுக்கும்உளம் நிறைந்து உதிர்க்கின்றேன்நன்றி… நன்றி… நன்றி…!
-கிளியனூர் இஸ்மத் ஹக்கியுல் காதிரி